மாலுமிகளை திருப்பி அனுப்பும் இத்தாலி: மரண தண்டனை கூடாது என நிபந்தனை- ஏற்றது இந்தியா!
ரோம்: அரபிக் கடற்பரப்பில் தமிழக மீனவர்களை படுகொலை செய்த மாலுமிகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இத்தாலி திடீரென ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆனால், அவர்களுக்கு மரண தண்டனனை விதிக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது. இதை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது.
மீனவர்கள் படுகொலை தொடர்பான வழக்கில் விசாரணையை எதிர்கொண்டிருந்த இத்தாலி மாலுமிகள் சல்வடோர் கிரோனே, மாசிமிலானோ லடோர் ஆகியோர் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த நாட்டுக்குச் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதித்திருந்தது. ஆனால் திடீரென அவர்களை இந்தியாவுக்கு மீண்டும் அனுப்பி வைக்க முடியாது என இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்தது. இதையடுத்து இத்தாலி தூதர் இந்தியாவில் இருந்து வெளியேற உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்தது. இத்தாலியின் செயலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக இரு மாலுமிகளையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதாக இத்தாலி அரசு நேற்று மாலை தெரிவித்தது. இருவரும் இன்று மீண்டும் இந்தியா திரும்புவர் என்று தெரிகிறது.
ஆனால், அவர்களுக்கு மரண தண்டனை கூடாது என்ற நிபந்தனையை விதித்துள்ளது. இந்த நிபந்தனையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதையடுத்தே அவர்களை அனுப்பி வைக்க ஒப்புக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக உள்துறை இணை அமைச்சர் ஆர்பிஎன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் கண்டிப்பான செயல்பாடு வேலை செய்யத் தொடங்கிவிட்டது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.