உள்பேர வர்த்தக மோசடி- அமெரிக்காவில் ராஜரத்தினம் தம்பி மீதும் குற்றச்சாட்டு பதிவு
அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் நிதி விவரங்களை ‘இன்சைடர் டிரேடிங்' மூலம் அறிந்து 75 மில்லியன் டாலர்கள் மோசடி செய்தார் ராஜ் ராஜரத்தினம் என்பது புகார். அவர் கைது செய்யப்பட்டு 11 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் ராஜ் ராஜரத்தினத்தின் கூட்டாளியான ரஜத் குப்தா அமெரிக்கா போலீசிடம் சரணடைந்திருந்தார்.
இந்நிலையில் ராஜ் ராஜரத்தினத்தின் சகோதரர் ரெங்கன் ராஜரத்தினத்தின் மீதும் அமெரிக்க நீதிமன்றத்தில் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ராஜ் ராஜரத்தினத்தின் மோசடியில் ரெங்கன் ராஜரத்தினத்தின் பங்கும் அதிகம் என்பது குற்றச்சாட்டு.
அதாவது ராஜ் ராஜரத்தினம் கலியோன் 'ஹெட்ஜ் பண்ட்' நிறுவனம் மூலம் பிற நிறுவனத்தின் பங்கு நிலைமைகளை அந்தந்த நிறுவன அதிகாரிகளிடம் இருந்து முறைகேடாக அறிந்து கொண்டு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்த முறைகேட்டுக்கு உதவினார் ரெங்கன் ராஜரத்தினம் என தற்போது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கில் அதிகபட்சமாக 20 ஆண்டு சிறைத் தண்டனைக்கு வாய்ப்பிருந்தாலும் ரெங்கன் ராஜரத்தினத்துக்கு குறைந்தபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.