பட்ஜெட் கூட்டத்தொடர்: பார்லிமெண்டுக்கு மட்டம் போட்ட ரேகா, சச்சின்!
நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 22ம் தேதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. ஒரு மாதத்துக்குப் பின்னர் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கும்.
கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற கூட்டத் தொடரில் ஒரு நாளில் கூட புதிய மாநிலங்களவை உறுப்பினர்களான சச்சினும், ரேகாவும் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக அவர்கள் லீவ் கேட்டு விண்ணப்பம் அளித்திருந்தனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து வரும் கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் பங்கேற்க வேண்டி, பிப்ரவரி 21 முதல் மார்ச் 7-ம் தேதி வரை விடுமுறை வேண்டும் என்று சச்சின் விண்ணப்பம் அளித்திருந்தார். அது ஏற்கெனவே ஏற்கப்பட்டது.
அதேபோல், பிப்ரவரி 21 முதல் மார்ச் 22 வரை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதிலிருந்து விடுமுறை அளிக்க வேண்டும் என்று ரேகா அளித்திருந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த 5-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை விடுமுறை கேட்டு, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா விண்ணப்பித்திருந்தார். அதுவும் மாநிலங்களவையில் ஏற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.