தமிழகத்தில் 16 வெளிநாட்டு கார்கள் பறிமுதல்- முக்கிய குற்றவாளி அலெக்ஸை பிடிக்க சிபிஐ மும்முரம்
சென்னை: வெளிநாட்டு கார்கள் இறக்குமதியில் மோசடி வழக்கில் தமிழகத்தில் இருந்து 16 கார்களை சிபிஐ நேற்று பறிமுதல் செய்திருக்கிறது.
வெளிநாடுகளில் இருந்து விலை மதிப்புமிக்க அதிநவீன சொகுசு கார்களை இறக்குமதி செய்து, இந்தியாவில் உள்ள தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகர் - நடிகைகளுக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தவர் கேரளாவின் அலெக்ஸ் ஜோசப். இப்படி இறக்குமதி செய்யும் கார்களுக்கு காரின் மதிப்புக்கு 3 மடங்குக்கு அதிகமாக சுங்க வரி கட்ட வேண்டும். ஆனால் சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன் போலி ஆவணங்கள் தயாரித்து கார் இறக்குமதியில் பெருமளவில் ஜோசப் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்.
இது தொடர்பான வழக்கு ஒன்றில் 2011-ம் ஆண்டு அலெக்ஸ் ஜோசப் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இதனிடையே கடந்த 13 ஆண்டுகளில் 450 வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்து அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படுத்தியதாக வருவாய் புலனாய்வுத் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். ஆனால் ஜாமீனில் வெளியே வந்த அலெக்ஸ் ஜோசப் தலைமறைவாகிவிட்டார். இந்தியாவின் முன்னணி தொழில்அதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகளிடம் நெருக்கமாக பழகி வந்த அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அலெக்ஸ் ஜோசப்பின் வீடுகள், அலுவலகங்களில் ஏற்கனவே சோதனையை நடத்தி முடித்து விட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர்.
இந்த ஆவணங்களின் அடிப்படையில் ஜோசப்பிடம் கார் வாங்கியவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இப்படித்தான் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் அவரது மகன் உதயநிதியிடம் விசாரனை நடத்தப்பட்டது. இது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இருப்பினும் சென்னையில் கடந்த 2 நாட்களாக வி.ஐ.பி.க்களிடம் உள்ள வெளி நாட்டு கார்கள் பற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையைத் தொடர்ந்தனர் நேற்று மட்டும் தமிழகத்தில் இருந்து 16 வெளிநாட்டு கார்களை சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதற்கிடையே பறிமுதல் செய்த வெளி நாட்டு கார்களில் பெரும்பாலானவற்றை அவற்றின் உரிமையாளர்களிடம் சி.பி.ஐ. திருப்பி ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும்போது கார்களை கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இவை திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது..
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அலெக்ஸ் ஜோசப் பிடிபட்டால்தான் இந்த வழக்கின் அடுத்தக் கட்டத்துக்கு செல்ல முடியும் என்பதால் அவரை கைது செய்ய நாடெங்கும் சி.பி.ஐ. வலை விரித்துள்ளது. டெல்லியில் உள்ள அவர் வீட்டில் அலெக்ஸ் மனைவி சரிதாவிடமும் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.
மேலும் அலெக்ஸ் ஜோசப்பை தேடப்படும் குற்றவாளியாக சி.பி.ஐ. அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளது. அவரது சொத்துக்களை முடக்கவும் சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.