முலாயம்சிங்குடன் மீண்டும் மல்லுக் கட்டும் மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா!
மத்திய அமைச்சரான பேனி பிரசாத் வர்மா, அண்மையில் முலாயம்சிங்கை தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என்றும் கொள்ளைக்காரர் என்றும் பேசியிருந்தார். இதனால் பார்லிமென்ட்டில் சமாஜ்வாடி கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேனி பிரசாத்தை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த விவகாரத்தால் மத்திய அரசுக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவை சமாஜ்வாடி விலக்கிக் கொள்ளுமோ என்ற ஒரு நிலை உருவானது.பின்னர் தமது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
இந்நிலையில் மீண்டும் நேற்று பெனிபிரசாத் வர்மா, முலாயம்சிங் யாதவை வம்புக்கு இழுத்துள்ளார். லக்னோவில் மாநில அரசுக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்தியது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா, தன்னையும், தன் குடும்பத்தையும் பற்றி மட்டுமே அக்கறை கொள்பவர்கள் சாதாரண மக்கள் பற்றியும், சமூகத்தை பற்றியும் எப்படி சிந்திப்பார்கள் என்று யார் பெயரையும் குறிப்பிடாமல் கூறினார். தலித் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் எல்லாம் வேலை இல்லாதவர்களுக்கு ஊக்கத்தொகையாகவும், லேப்டாப்களாகவும் வழங்கப்படுகிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, லஞ்சம் ஆகியவை அதிகரித்துவிட்டது. துணை சூப்பிரண்டு ஜியா உல் ஹக்கை கொலை செய்த குற்றவாளிகளை இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கும் முன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பொரிந்து தள்ளினார்.
இதனால் சமாஜ்வாடி கட்சியினர் மீண்டும் கொந்தளித்துப் போயிருக்கின்றனர்.