கோவில்பட்டியில் தேவர் சிலை சேதம்: சாலை மறியல், பஸ்கள் மீது கல்வீச்சு, பதட்டம், 11 பேர் கைது
கோவில்பட்டி: கோவில்பட்டியில் முத்துராமலிங்கத் தேவரின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் 11 பேரை கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள சங்கரலிங்கரபுரத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை உள்ளது. இந்த சிலையை யாரோ சேதப்படுத்தியுள்ளனர். நேற்று காலை சிலை சேதமடைந்திருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த செயலைக் கண்டித்து கோவில்பட்டியில் ஆங்காங்கே சாலை மறியல் நடத்தப்பட்டது. மேலும் கோவில்பட்டி தினசரி சந்தை, பெட்ரோல் பங்குகள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. நகரில் பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது குறித்து அறிந்த போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் சிலையை சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும், புதிய சிலையை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சிலையை சேதப்படுத்தியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், புதிய சிலை வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதற்கிடையே நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலையிலும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
இந்நிலையில் குமரி மாவட்டம் மயிலாடியில் செய்யப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் சிலை கோவில்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சிலை இருக்கும் இடத்திற்கு அருகே வைக்கப்பட்டது. பழைய சிலையை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்த புதிய சிலையை நிறுவும் பணி உடனே துவங்கும் என்று போலீசார் கூறினர்.
சிலையை சேதப்படுத்தியது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த முத்துசாமி, காளிராஜ், ராஜகுரு, சிவா என்ற ஜெயசிவா, செல்லதுரை, விமல், ஹரிகிருஷ்ணன், நடராஜன், விஜயகுமார் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு:
நெல்லை மாவட்டத்தில் சமுதாய தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் சிலைகளுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் நெல்லை மாவட்ட ஏடிஎஸ்பி மகேந்திரன் தலைமையில் மணிமுத்தாறு பட்டாலியன், மாவட்ட ஆயுதப்படை போலீசார், மற்றும் ஊர்காவல் படையினர் 1,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்திலேயே மானூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 10 சிலைகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.