மதுரை மருத்துவக் கல்லூரியில் ராகிங்: 5 மாணவர்கள் மீது நடவடிக்கை
மதுரை: மதுரை மருத்துவக் கல்லூரியில் ராகிங் புகார் எழுந்ததை அடுத்து, 5 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு முதல் 5 ஆண்டுகள் வரை பயிலும் 650 மாணவ, மாணவியர்களில், சுமார் 450 பேர் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர். முதலாண்டு மாணவர்கள் கல்லூரிக்கு வரும்போதே மற்ற மாணவ, மாணவியர் வரவேற்கும் வகையிலான நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது வழக்கம். ராகிங் தடுப்பு கண்காணிப்புக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளான. ராகிங் குறித்த புகார்களை ரகசியமாகத் தெரிவிக்க புகார் பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன.
புகார்....
இந்த நிலையில், மதுரை மருத்துவக் கல்லூரி விடுதியில் முதலாண்டு மாணவர்களை மற்ற மாணவர்கள் ராகிங் செய்வதாக கடந்த மாதம் புகார் எழுந்தது. முதலாண்டு மாணவர்கள் அதிக நேரம் படிக்கக் கூடாது, திரைப்படத்துக்குச் செல்லக் கூடாது என மூன்றாமாண்டு மற்றும் மூத்த மாணவர்கள் ராகிங் செய்ததாகவும் புகார் எழுந்தது.
எச்சரிக்கை....
புகார் குறித்து மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் என்.மோகன் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அறிவுரை கூறி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. மேலும், ராகிங் செய்வோர் குறித்து தமக்கு செல்போனில் குறுந்தகவல் மூலம் புகார் தெரிவிக்கவும் டீன் அறிவுறுத்தியிருந்ததாகத் தெரிகிறது.
நள்ளிரவில் ராகிங்...
இந்த நிலையில், கடந்த வாரம் முதலாண்டு விடுதி மாணவர்களை மற்ற மாணவர்கள் நள்ளிரவில் ராகிங் செய்து தொந்தரவு செய்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, குறிப்பிட்ட 5 மாணவர்கள் 15 நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.
கண்காணிப்பு தீவிரம்...
இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் என்.மோகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,' மருத்துவக் கல்லூரியில் ராகிங் நடக்காமல் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அறிவுரை எனும் பெயரில் முதலாண்டு மாணவர்களை நள்ளிரவில் மற்ற மாணவர்கள் தொந்தரவு செய்திருப்பதை ஏற்க முடியாது. அதனடிப்படையில் 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
கேலி...கிண்டல்...
மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் மீது மட்டுமல்ல, சில மாணவியரையும் கேலி எனும் பெயரில் மாணவர்கள் தொந்தரவு செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாணவியர் வலியுறுத்தி வருகின்றனர்.