கோடை தாகத்தை தணிக்க குடிநீர் & மோர் பந்தல்கள்: தொண்டர்களுக்கு ஜெ. கோரிக்கை
சென்னை: கோடை தாகத்தை தணிக்க குடிநீர் மற்றும் மோர் பந்தல்கள் அமைத்து மக்கள் பணியாற்ற வேண்டும் என தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் தொண்டே...
மக்களின் வாட்டத்தைப் போக்குவதிலும், குறைகளை களைவதிலும், மக்களுக்கு ஆற்றும் தொண்டினை மகேசனுக்கு ஆற்றும் தொண்டு போல் பாவித்து செயல்படுவதிலும், மற்ற இயக்கங்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக செயல்படும் இயக்கம் அ.தி.மு.க. என்றால் அது மிகையாகாது.
கோடையில் ஒரு குளு... குளு...
சுட்டெரிக்கும் கோடை வெயிலில் மக்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள் அமைப்பது வழக்கம்.
தாகத்தை தீருங்கள்...
மக்கள் சேவையை மகத்தான முறையில் செய்யும் ஆற்றல் கொண்ட என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள், கோடை வெயிலில் பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் ஆங்காங்கே குடிநீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள் முறையாக அமைத்து மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என ஜெயலலிதா கூறியுள்ளார்.