சென்னையிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் மஸ்கட் செல்ல முயன்ற 6 பேர் கைது
சென்னை: போலி பாஸ்போர்ட்டில் மஸ்கட் செல்ல முயன்ற 6 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ரியாத் வழியாக மஸ்கட்டுக்கு விமானம் செல்ல இருந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இதில் வங்காளதேசத்தைச் சேர்ந்த 6 பேர் போலி பாஸ்போர்ட்டில் மஸ்கட் செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் 6 பேரும் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணையில் அவர்க ள் 6 பேரும் வங்காளதேசத்தைச் சேர்ந்த அப்துல்மன்னன் (28), அவினூர் (23), ஜாகீர் உசேன் (25), ஜிபின்சேக் (27), மிராஜ் சேக் (20), முகமது முனிர்வர்ஷ் சாகர் (27) ஆகியோர் என தெரிய வந்துள்ளது.
இவர்கள் மஸ்கட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்க்க செல்வதற்காக கொல்கத்தா வழியாக டெல்லி வந்துள்ளனர். அங்கு ஏஜெண்டு ஒருவரிடம் தலா ரூ. 2 லட்சம் கொடுத்து போலியாக பாஸ்போர்ட் தயார் செய்ததும், பின்னர் ரயிலில் சென்னைக்கு வந்து, விமானம் மூலம் மஸ்கட் செல்ல முயன்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைதானவர்களிடம் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.