10ம் வகுப்பு மாணவி படிக்க சொந்த செலவில் மின் இணைப்பு வழங்கிய கல்வி அதிகாரி
நாகர்கோவில்: ஆரல்வாய்மொழியில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்த 10ம் வகுப்பு மாணவியின் வீட்டுக்கு கல்வி அதிகாரி ஒருவர் தனது சொந்த செலவில் மின் வசதி செய்து கொடுத்துள்ளார்,
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஏசுராஜ். செங்கல் சூளையில் கூலி வேலை பார்க்கும் அவரது மகள் நிஷா நந்தினி. அவர் தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த மாதம் முதன்மைக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளின் வீடுகளுக்குச் சென்று, அவர்களின் கற்கும் திறனை ஆய்வு செய்தார். அப்போது மாணவி நிஷா நந்தினி வீட்டிற்கும் அவர் சென்றுள்ளார்.
அவர் சென்றபோது வீட்டில் மின் இணைப்பின்றி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மாணவி படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த ராதாகிருஷ்ணன் மின்வசதி செய்து கொடுப்பதாக அவரது பெற்றோரிடம் உறுதி அளித்தார். அதன்படி தனது சொந்த செலவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.
இதையடுத்து நிஷா நந்தினியின் வீட்டுக்கு அண்மையில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. பின்னர் ராதாகிருஷ்ணன், மாணவியின் வீட்டுக்குச் சென்று மின் விளக்குகளை இயக்கி வைத்தார். தற்போது நிஷா நந்தினி முன்பைவிட உற்சாகமாக பத்தாம் வகுப்பு தேர்வுக்காக படித்து வருகிறார். மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட இது போல நல்ல அதிகாரிகள் உருவாகி கல்வித் துறையை வளப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் ஆசை.