கள்ளக்காதல் விவகாரத்தில் ஹோட்டல் உரிமையாளருக்கு கத்தி குத்து
கிருசஷ்ணகிரி: மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் கள்ளக்காதலனான ஹோட்டல் உரிமையாளரை கத்தியால் குத்தினார்.
கிருசஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த மஞ்சமேடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (40). இவர் அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (43). இவரும் மஞ்சமேடு பகுதியில் மீன் கடை வைத்துள்ளார். பக்கம் பக்கமாக கடை வைத்திருக்கும் வெங்கடேசனின் மனைவிக்கும், பெருமாளுக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இதனால், வெங்கடேசனுக்கும், பெருமாளுக்கும் அடிக்கடி தகராறும், அடிதடியும் ஏற்படும். நேற்று முன்தினம் மாலை தென்பெண்ணை ஆற்றங்கரையில் பெருமாள் நின்றபோது, அங்கு வந்த வெங்கடேசன், பெருமாளிடம் தகராறு செய்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெருமாளை குத்தியுள்ளார்.
இதில், படுகாயம் அடைந்த பெருமாள் ஆத்திரம் அடைந்து வெங்கடேசனை கல்லால் தாக்கியுள்ளார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்து காயமடைந்த பெருமாளை சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனையிலும், வெங்கடேசனை போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையிலும் கொண்டுபோய் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இதைத்தொடந்து அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு, மேலும் பலர் கடையை அடைத்துவிட்டனர். போலீசார் வந்த பிறகு இயல்பு நிலை திரும்பியது. இதுகுறித்து பாரூர் போலீஸார், இருவர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.