ஆக்ரா ஹோட்டலில் கற்பை காக்க நடந்த போராட்டம்: இங்கிலாந்து பெண் பரபரப்பு பேட்டி
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஹோட்டல் ஆக்ரா மகாலில் தங்கியிருந்தவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனைச் சேர்ந்த ஜெசிகா டேவீஸ்(31). அவரிடம் ஹோட்டல் மேனேஜர் சில்மிஷம் செய்ய முயன்றதால் அவர் பால்கனியில் இருந்து கீழே குதித்து தப்பித்தார். இதையடுத்து இங்கிலாந்துக்கு சென்ற அவர் நடந்த சம்பவம் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பேட்டியில் அவர் கூறுகையில்,
நான் ஆக்ரா மகால் ஹோட்டலில் தங்கியிருந்தபோது நள்ளிரவில் ஹோட்டல் மேனேஜர் தன் கையில் 2 பாட்டில் எண்ணெயுடன் என் அறைக்கு வந்தார். எனக்கு மசாஜ் செய்துவிடுவதாகக் கூறினார். நான் அவரை வெளியே தள்ளிவிட்டு கதவைப் பூட்டினேன். ஆனால் அவர் போகாமல் தன்னை அறைக்குள் விடுமாறு கூறி கதவை தட்டிக் கொண்டே இருந்தார். அவர் போவதாகத் தெரியாததால் உதவி கேட்டு நான் கத்தினேன். அப்போது இன்னொரு நபரும் அவருடன் சேர்ந்து கொண்டு தட்டினார்.
எனது அறையில் உள்ள பால்கனி வழியாக அவர்கள் வந்துவிடக்கூடும் என்பதை உணர்ந்தேன். அந்த நேரம் மின்தடை ஏற்பட்டதால் அறை இருட்டாக இருந்தது. என்னுடைய போனும் வேலை செய்யவில்லை. என்னை காத்துக்கொள்ள பால்கனியில் இருந்து குதிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அதனால் தான் இரண்டாவது மாடியாக இருந்தாலும் பரவாயில்லை என்று பால்கனியில் இருந்து குதித்துவிட்டேன். இதில் காலில் காயம்பட்ட நான் தெருவில் ஓடிப் போய் உதவி கேட்டேன். ஆனால் யாரும் புரிந்துகொள்ளவில்லை. இறுதியில் ஒரி ரிக்ஷாக்காரர் லிப்ட் கொடுத்து காவில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்று நடந்தவற்றை போலீசாரிடம் தெரிவித்தேன்.
இந்தியாவுக்கு தனியாகச் செல்லும் பெண்களை எச்சரிக்கவே எனக்கு நேர்ந்ததை தற்போது தெரிவித்துள்ளேன். இதனால் நான் இந்தியாவுக்கு செல்லாமல் இருக்க மாட்டேன். ஆனால் இனிமேல் தனியாக செல்ல மாட்டேன் என்றார்.