17 வயதில் கோடீஸ்வரன், யாஹூவில் வேலை: இங்கிலாந்து சிறுவன் அபாரம்
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த நிக் டிஅலோய்சியோ(17) தான் கண்டுபிடித்த அப்ளிகேஷன் ஒன்றை யாஹூ நிறுவனத்திற்கு பல கோடிக்கு விற்றுள்ளார். இது தவிர அவருக்கு யாஹூ நிறுவனம் வேலையும் அளித்துள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனைச் சேர்ந்தவர் நிக் டிஅலோய்சியோ(17). உயர் நிலைப் பள்ளி மாணவர். அவரது தந்தை மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தில் பணி புரிகிறார். தாய் வழக்கறிஞராக உள்ளார். நிக் 12 வயதில் இருந்து கோடிங் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் செல்போனில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் ஒன்றை கண்டுபிடித்தார்.
சம்லியால் கோடீஸ்வரனான நிக்
நிக் செல்போனில் செய்தி வாசிக்க உதவும் சம்லி என்ற அப்ளிகேஷனை கண்டுபிடித்தார். இது குறித்து அறிந்த யாஹூ நிக்கிற்கு பல கோடி ரூபாய் கொடுத்து அந்த அப்ளிகேஷனை வாங்கிவிட்டது. யாஹூ 30 மில்லியன் டாலர் கொடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் யாஹூவிடம் இருந்து பெற்ற தொகையை தெரிவிக்க நிக் மறுத்துவிட்டார்.
17 வயதில் யாஹூவில் வேலை
நிக் உயர் நிலைப்பள்ளியை முடிக்க இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. ஆனால் தற்போதே அவருக்கு யாஹூ நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டது.
ஒர்க் ஃப்ரம் ஹோம் கிடையாது தம்பி
யாஹூ நிறுவன சிஇஓ மரிஸா மேயர் ஊழியர்கள் யாரும் வீட்டில் இருந்தபடியே பணியாற்றக் கூடாது என்று அண்மையில் உத்தரவிட்டார். அதன்படி நிக் லண்டனில் உள்ள யாஹூ அலுவலகத்தில் வேலை பார்ப்பார். பள்ளிக்கு செல்லாமலே தேர்வு எழுத வழி தேடிக் கொண்டிருக்கிறார்.