அமெரிக்க ராணுவத்தினர் பயன்படுத்தும் ஆயுதங்கள் விடுதலைப் புலிகளிடம் எப்படி வந்தது? இலங்கை அரசு
கொழும்பு: அமெரிக்க ராணுவத்தினர் பயன்படுத்தும் அதிநவீன ஆயுதங்கள் விடுதலைப் புலிகளின் கைகளுக்கு எப்படி வந்தது என்று இலங்கை அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
ஜ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்தது. நீர்த்துப் போன தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கே இலங்கை அரசு ஆத்திரம் அடைந்து அதை ஏற்க மறுத்தது.
இந்நிலையில் இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 11 நாடுகள் ஆயுதங்கள் வழங்கியுள்ளன. இது தொடர்பான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. முள்ளி வாய்க்காலில் மீட்கப்பட்ட ரகசிய ஆவணங்களில் இந்த ஆயுத கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான ஆதாரங்கள் காணப்படுகின்றன.
அமெரிக்க படையினர் பயன்படுத்தும் எம்.16 ஆயுதங்களையும், சமிக்ஞை கருவிகளையும் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியுள்ளனர். அவர்களின் கப்பல்கள் சர்வதேச கப்பல் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன. ராணுவத்தினருக்கு கிடைக்காத சில எந்திர சாதனங்களை விடுதலைப்புலிகள் பயன்படுத்தினர். எனவே, இந்த ஆதாரங்கள் சர்வதேச சமூகத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விடுதலைப் புலிகளுக்காக ஆயுதம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட குமரன் பத்மநானை சாட்சியாக்கவும் திட்டமிட்டிருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.