இலங்கை விவகாரம்: புதிய இணையதளம் துவங்கும் கல்லூரி மாணவர்கள்
தமிழகத்தில் நடந்து வரும் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில் ஃபேஸ்புக்கில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு என்ற அமைப்பினை ஏற்கனவே தொடங்கியுள்ள மாணவர்கள் அதில் வெற்றியும் அடைந்துள்ளனர்.
சிங்களப் படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படத்துடன் இந்த ஃபேஸ்புக்கின் முகப்பு அமைக்கபட்டிருந்தது. தற்போது இந்த படம் மாற்றப்பட்டு "ஐ சப்போர்ட் தமிழ் ஈழம்" என்ற படம் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த 10 நாட்களில் 28,000 பேர் இணைந்துள்ளனர். மேலும் சுமார் 1 லட்சத்து 17,000 பேர் இந்த பக்கத்தை பார்வையிட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் மாணவர்கள் போராட்டத்தை ஒருங்கிணைத்திட ஃபேஸ்புக் களமாக உள்ள நிலையில் தற்போது மாணவர்கள் ஒருங்கிணைந்து தனியாக ஒரு இணையதளத்தை ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.
தங்களுக்கு தனி இணையதளம் இருந்தால் மட்டுமே உலக அளவில் தமிழர்கள் போராட்டம் குறித்த செய்திகளை கொண்டு செல்ல முடியும் என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்து வரும் போராட்டங்களை குறும்படமாக்கி உலக நாடுகளுக்கு அனுப்பி இலங்கைக்கு எதிராக அனைத்து நாடுகளையும் கண்டன குரல் எழுப்ப வைக்கும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட உள்ளனர்.