மதுரையில் ஓடும் பேருந்தில் நெஞ்சுவலியால் மயங்கியும் பயணிகளை காப்பாற்றிய டிரைவர்
மதுரை: மதுரையில் ஓடும் பேருந்தில் டிரைவருக்கு நெஞ்சுவலி வந்து மயங்கியபோதும் அவர் பயணிகளைக் காப்பாற்றியுள்ளார்.
மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து ராமநாதபுரம் பகுதிக்கு கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று நேற்று மாலை கிளம்பியது. பேருந்தை பரமக்குடியைச் சேர்ந்த போஸ் ஓட்ட பாண்டுரங்கன் என்பவர் நடத்துநராக இருந்தார். ரிங் ரோட்டில் பேருந்து வந்தபோது கமுதிக்கு சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர் அரசு பேருந்தை முந்திச் சென்றார். அப்போது அரசு பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடி சேதமடைந்தது.
இதையடுத்து விரகனூர் ரிங்ரோட்டில் அரசு பேருந்து ஓட்டுநருக்கும், தனியார் பேருந்து ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப் பார்த்த அங்கிருந்த போலீசார் வந்து அவர்களை சமாதானம் செய்து வைத்து அனுப்பினர். இதனால் மனவேதனையுடன் பேருந்தை கிளப்பிய போஸ் விரகனூர் அணை பகுதியை அடைந்தபோது திடீர் என்று இருக்கையிலேயே மயங்கினார். அப்படி இருந்தும் அவர் பயணிகளைக் காக்க தனியார் பொறியியல் கல்லூரி அருகே சாலையோரம் இடதுபுறம் பேருந்தை ஓரங்கட்டினார். ஆனால் எதிரே மின்மாற்றி இருந்ததால் பேருந்தை வலப்புறம் திருப்பினார். அப்போது பேருந்து அங்கிருந்த பள்ளத்தில் சிக்கி நின்றது. இதில் சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
உடனே பேருந்தில் இருந்து கீழே இறங்கிய பயணிகள் மயங்கிக் கிடந்த ஓட்டுநரை மீட்டு அவசர ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் நெடுநேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் அந்த வழியாக வந்த ஆட்டோக்களை நிறுத்தினர். ஆனால் ஒரு ஆட்டோ கூட நிற்கவில்லை. இதையடுத்து அந்த பக்கம் வந்த அரசு பேருந்தை நிறுத்தி போஸை அதில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் உடனே வராததால் ஓட்டுநரின் நிலைமை கவலைக்கிடமானது.