இந்தியாவுக்கு ரூ.12,650 கோடி கடன் வழங்கும் ஜப்பான்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் புமியோ கிஷிடாவை இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று (புதன்கிழமை) சந்தித்துப் பேசினார். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்தியாவில் உள்கட்டமைப்பு திட்டங்கள் மேற்கொள்ளவும், மும்பையில் சுரங்கப்பாதை திட்டத்துக்காகவும் 2.32 பில்லியன் டாலர்கள் கடனுதவி வழங்க ஜப்பான் ஒப்புக் கொண்டுள்ளது.
இதுகுறித்து, இந்திய வெளியுறவு அமைச்சர் குர்ஷித் கூறும்பொழுது, ‘இந்நிதியுதவியின் மூலம் இந்தியாவில் அடிப்படை கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும். ஏற்கெனவே ஜப்பான் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் திட்டம் லட்சக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது' என்றார்.
மேலும், ‘புதிய கடனுதவியின் மூலம் தில்லி-மும்பை இடையே ஆன சிறப்பு சரக்கு ரயில்பாதை, சுரங்கப்பாதை திட்டம் மேற்கொள்ளப்படும். மேலும் அதிவேக ரயில் திட்டங்கங்களை செயல்படுத்தவும் இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. பாதுகாப்புத் துறையிலும் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது.
ஆசியாவின் இருபெரும் ஜனநாயக நாடுகளான ஜப்பானும், இந்தியாவும், ஆசிய-பசிபிக் பகுதியில் தங்கள் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளன' என்றார் குர்ஷித்.
ஜப்பான் வெளியுறவு அமைச்சர் புமியோ கிஷிடா கூறியதாவது, ‘ராணுவம் மற்றும் கடல்பகுதி பாதுகாப்பு தொடர்பாக இரு நாடுகளும் நெருங்கி செயல்படும். இதுதொடர்பாக அமெரிக்காவையும் இணைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இரு நாடுகள் இடையே ஆன அணுசக்தி ஒத்துழைப்பையும் அதிகப்படுத்த உள்ளோம். மேலும் பிரதமர் மன்மோகன் சிங் வருகை தொடர்பாகவும் பேச்சு நடத்தினோம். கிழக்கு ஆசிய பகுதி தொடர்பான அனைத்து பிரச்னைகளிலும் இந்தியாவும்-ஜப்பானும் ஒருங்கிணைந்து செயல்படும்' என்றார் கிஷிடா.