அசாதுத்தீன் ஒவைசி மகாராஷ்டிராவுக்குள் நுழைய தடை
மகாராஷ்டிரா மாநில சட்டக் கவுன்சில் கூட்டத்தில் துலேவில் ஏற்பட்ட கலவரத்திற்கு மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் தலைவர்கள் தான் காரணம் என்று சிவ சேனா தலைவர் திவாகர் ராவோதே குற்றம்சாட்டினார். அதற்கு மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் கூறுகையில், இரண்டு சமூகத்திற்கு இடையே பிரச்சனை ஏற்படும்படி நடப்பவர்கள் மாநிலத்திறகு எதிரானவர்கள்.
அவுரங்காபாத்தில் மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் தலைவரும், லோக்சபா எம்.பி.யுமான அசாதுத்தீன் ஒவைசி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசவிருந்தார். ஆனால் அவர் அங்கு வர போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து அவர் இது குறித்து நீதிமன்றம் சென்றார். ஆனால் நீதிமன்றம் போலீசாரின் தடை உத்தரவை உறுதி செய்தது என்றார்.
ஆந்திர மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள நிர்மல் நகரில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த கூட்டத்தில் மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் எம்.எல்.ஏ. அக்பருத்தீன் ஒவைசி மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டார். இதையடுத்து ரங்காரெட்டி மாவட்டத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய அசாதுத்தீன் ஒவைசி எம்.பி., நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. எங்கள் எதிரிகள் காங்கிரஸும், பாஜகவும் தான். இது என் நாட்டு. என் நாட்டை நான் நேசிக்கிறேன். எனது தாய்நாட்டை நேசிப்பது எப்படி என்று காந்தியைக் கொன்றவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்கள், குஜராத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றவர்களிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்து சமுதாயத்தை தூண்டிவிடும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.