தயவுசெஞ்சு, ஒருவாட்டியாவது நம்ம கவர்ன்மென்ட் பஸ்ல போய்ட்டு வாங்க!
சென்னை: என்ன ஒரு நிம்மதியான பயணம்.. இதுதான் இப்போது நீண்ட தூர பயணங்களுக்கு தமிழக அரசுப் பேருந்துகளை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் சொல்லும் வார்த்தை.
நிஜமான வார்த்தைதான். முன்பு போல இப்போது தமிழக அரசுப்பேருந்துகளை யாரும் திட்டுவது கிடையாது. அது குறைந்து விட்டது. காரணம்,அரசுப் பேருந்துகளின் புதிய அவதாரம்.
ஆம்னி பஸ்களுடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணம், பளிச்சிடும் புதிய பஸ்கள், பிராம்ப்ட்டான பயண நேரம், ஆச்சரியப்படும் வகையில் அன்பாக பேசும் கண்டக்டர், டிரைவர் என அசரடிக்கிறது அரசுப் போக்குவரத்துக் கழகம்.
பெரும்பாலும் புதுசு
அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் முன்பு போல இல்லை. முன்பெல்லாம் வெற்றிலை போட்ட பாட்டி வாய் போல காணப்பட்ட அரசுப் பேருந்துகள் இப்போது சில்க் ஜிப்பா போட்ட நாட்டாமை போல கும்மென்று காணப்படுகின்றன.
டயர் பஞ்சர் - பிரேக் பெயிலியர் கிடையாது
அரசுப் பேருந்துகளில் அடிக்கடி பிரேக் பெயிலியர், டயர் பஞ்சர் என ஏகப்பட்ட மக்கர்கள் அடிக்கடி நடக்கும். ஆனால்இப்போது நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளில் முன்பு போல இப்படிப்பட்ட பஞ்சாயத்துக்கள் நடப்பதில்லையாம். எல்லா பஸ்ஸும் நல்ல கண்டிஷனுடன் பராமரிக்கப்படுவதாக டிரைவர்கள்,கண்டக்டர்கள் கூறுகிறார்கள்.
சூப்பர் ஸ்பீடு- ஆனால் நோ ஓவர் ஸ்பீடு
தமிழகத்தில பெரும்பாலான சாலைகள் அட்டகாசமாக உள்ளன. அதிலும் நான்கு வழிச் சாலைகளைச்சொல்லவே வேண்டாம். செமத்தியாக உள்ளஇந்த சாலைகளில் சீரான அதே நேரத்தில் சூப்பரான ஸ்பீடில் செல்லும்போது அந்த பயணமே அழகாகி விடுகிறது. அதேசமயம், சாலைதான் பெருஸ்ஸா இருக்கே என்று ஓவர்ஸ்பீடுக்கு அரசுப் பேருந்துகள் செல்வதில்லை. சீரான வேகத்தில்தா் டிரைவர்கள் செல்கிறார்கள். இது பாதுகாப்பை உறுதி செய்கிறது.
சிரிச்சுப் பேசுறாங்கப்பா...
அதை விட முக்கியமானது அரசுப் பேருந்துகளின் கண்டக்டர்களும், டிரைவர்களும் முன்பு போல இல்லை, நன்றாக சிரித்துப் பேசுகிறார்கள். மரியாதையுடன் பேசுகிறார்கள். சகஜமாக பழகுகிறார்கள். பயணிகள் கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்து பேசுகிறார்கள்.
சாப்பிட எங்க நிறுத்துவ...
சென்னை பெருங்களத்தூரிலிருந்து மதுரைக்குக் கிளம்பிய ஒரு பேருந்தை வழிமறித்த 10 பேர் கொண்ட ஒரு பயணிகள் குழு, வழியில் சாப்பிட பஸ் நிற்குமா, எங்கு நிற்கும், எப்போது நிற்கும், ஹோட்டல்ல சாப்பாடு நல்லாருக்குமா என ஏகப்பட்ட கொரிகளைப் போட்டு கண்டக்டரை தள்ளாட வைத்தது. ஆனாலும் கண்டக்டர் சளைக்காமல், கோபப்படாமல் படு ஜாலியாக பதிலளித்து அவர்களை சாமர்த்தியமாக அப்படியே பஸ்சுக்குள் அள்ளிப்போட்டுக் கொண்டார்.
மறக்காதீங்க..விக்கிரவாண்டி பன் பட்டர் ஜாம்
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் போது அரசு பேருந்துகளை விக்கிரவாண்டியில் சாப்பிட நிறுத்துகிறார்கள். தம் அடிக்க, உச்சா போக, சாப்பிடுவதற்காக இந்த ஹால்ட். புல் மீல்ஸ் சாப்பிட விரும்பாதவர்கள் பன் பட்டர் ஜாம் சாப்பிடுகிறார்கள். சூப்பர் என்று கண்டிப்பாக சொல்ல முடியாதுதான்... ஆனால் வித்தியாசமாக இருக்கிறது. நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் பன் பட்டர் ஜாமுடன் வாய் பிளந்து சாப்பிட்டால் வித்தியாசமாகத்தானே இருக்கும்...அதைச் சொன்னோம்.
நல்லா எண்ணிப் பார்த்துக்க தாமோதரா...
பஸ்ஸை சாப்பிட நிறுத்தி விட்டு பிறகு எடுக்கும்போது கண்டக்டர் விடுவிடுவென பஸ்சுக்குள் போகிறார். ஒன்னு, ரெண்டு, மூணு என்று வாய் விட்டு பயணிகளை எண்ணுகிறார்.டிரைவர் அங்கிருந்து நல்லா எண்ணிப் பார்த்துக்க தாமோதரா என்று சொல்கிறார். எண்ணி முடித்துத் திரும்பும் கண்டக்டர் எல்லோரும் இருப்பதை உறுதி செய்த பின்னர் போலாம்ணே என்று சொல்ல பஸ் கிளம்புகிறது.
எல்லாமே ரசிக்க வைக்கிறது
அரசுப் பேருந்துகள் முன்பு போல இல்லை. நிறைய மாறி விட்டன. நல்ல பஸ்கள்,அழகான பஸ்கள், பாந்தமான டிரைவர் கண்டக்டர்கள், தேவையில்லாத நிறுத்தங்கள் கிடையாது, வம்பு பேசுவதில்லை. இப்படி நிறைய மாற்றங்கள். எனவே ஒருமுறையாவது அரசுப்பேருந்தில் போய் வாருங்கள், நிச்சயம் ரசிப்பீர்கள்.
சும்மா தூங்குவதற்குப் பதில்...
ரயிலில் போனால் வெறுமனே தூங்கத்தான் வேண்டியிருக்கும். ஆனால் அரசுப் பேருந்தில்,அதிலும் அல்ட்ரா டீலக்ஸ் போன்ற பஸ்களுக்குப் பதில் பார்க்க டவுன் பஸ் போலவே இருக்கும் சாதாரண பேருந்துகளில் பாட்டுக் கேட்டபடி, அரைத்தூக்கமும்,அரட்டையுமாக அமர்ந்திருக்கும் பயணிகளை வேடிக்கை பார்த்தபடி, பக்கத்தில் இருப்பவருடன் நெருக்கியடித்தபடி பேசிக் கொண்டு பயணிப்பது உண்மையிலேய சுகானுபவம்.
இத்தனை பஸ் விட்டும் என்ன புண்ணியம்...
திருச்சியிலிருந்து மதுரைக்குப் போனபோது, திருச்சி பஸ் நிலையத்தில் ஒரு அரசுப் பேருந்தின் கண்டக்டர் சொன்ன வார்த்தை இது.. அரசு இத்தனை பஸ்களை விட்டுள்ளது. நிறைய புது பஸ்கள். கட்டணமும் குறைவுதான். நல்லாத்தான் ஓட்டுறோம். எந்தக் குறையும் இல்லை. ஆனாலும் ஆம்னி பஸ்களைத்தான் மக்கள் முதலில் நாடுகிறார்கள். அதுதாங்க கஷ்டமா இருக்கு... அதுவே விடுமுறைக் காலத்தில் எந்த பஸ்சிலும், ரயிலிலும் இடம் இலல்லாமல் எங்களைத்தான் நாடுகிறார்கள். அப்போது பஸ் கிடைக்காவிட்டால், கூட்டமாக இருந்தால் கூடுதலாக பஸ் விட வேண்டியதுதானே என்று எங்களை திட்டுவார்கள்.. என்ன நியாயம் இது என்றார்.
நிச்சயம் மக்கள் யோசிக்க வேண்டும்...!