மத்தியில் உள்ள 'கை' மண்ணெண்ணையை குறைக்கும் கை!: ஜெயலலிதா
சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்பொழுது, ‘மீனவர்களை பாதுகாப்பதில் நமது முதல்வர் அக்கறை காட்டி வருகிறார். கச்சத்தீவை மீட்டே தீருவேன் என்று அவர் சூளுரைத்துள்ளார். முதல்வரின் 'கை' மக்களை வாழ வைக்கும் 'கை'. ஆனால் மத்தியில் ஆட்சி செய்யும் 'கை' தமிழக மக்களை ஏமாற்றும் 'கை'. தமிழக மக்கள் பாதிக்கும் வகையில் அடிக்கடி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் கையாக இருக்கிறது' என்றார்.
ஓ.பன்ன்ர்செல்வத்தின் பேச்சிற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ரங்கராஜன், கோபிநாத், விஜயதாரணி ஆகியோர் இருக்கையைவிட்டு எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் அவர்களை இருக்கையில் அமரும்படி கூறினார். பின் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் பேச முயன்றார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு பேசினார். அவர் பேசியதாவது: ‘மத்தியில் இருக்கின்ற 'கை', பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த்துகிற 'கை' மட்டுமல்ல. தமிழ்நாட்டுக்கு வழங்கக் கூடிய மண்ணெண்ணையின் அளவை குறைக்கும் 'கை'யாகவும் உள்ளது. மத்திய அரசிடம் இருந்து 50 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணை தமிழகத்துக்கு வழங்கப்பட்டு வந்தது. அதன் அளவை 22 ஆயிரம் கிலோ லிட்டராக மத்திய அரசு குறைத்துள்ளது.
இது பற்றிய தகவல் நேற்றுதான் எனது கவனத்துக்கு வந்தது. மண்ணெண்ணையின் அளவு குறைக்கப்பட்டதால் இதை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளேன். 50 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணையை 22 ஆயிரம் கிலோ லிட்டராக குறைத்து தமிழ்நாட்டை பழி வாங்குகிற 'கை'தான் மத்தியில் இருக்கிறது', என ஜெயலலிதா பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அமைச்சர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை:
இந் நிலையில் தமிழகத்துக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக அமைச்சர்களுடன் முதல்வர் ஜெயலலிதா இன்று ஆலோசனை நடத்தினார்.
தமிழக அரசுக்கு வழங்கி வரும் மண்ணெண்ணெய் அளவினை ஏப்ரல் 1ம் தேதி முதல் மத்திய அரசு குறைத்துள்ளது. இது குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.