சட்டசபையில் அட்டென்டென்ஸ் போட்டார் கருணாநிதி.... உடனே வெளியேறினார்
அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் தமிழக சட்டப்பேரவை மீண்டும் கோட்டைக்கே மாற்றப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதிக்கு சட்டப்பேரவையில் சரியான இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.
இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நிகழ்வில் அவர் பங்கேற்பதில்லை. அவ்வப்போது வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு சென்றுவிடுவார்.
இன்றும் சட்டசபைக்கு கையெழுத்து போட வந்த கருணாநிதியை திமுகவினர் வரவேற்றனர். சட்டமன்ற லாபியில் வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் கையெழுத்து போட்ட கருணாநிதி பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பல்வேறு பிரச்சினைகள் குறித்து காரசார விவாதம் நடந்து வருகிறது. நேற்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் கூறிய கருத்துக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
இன்றும் ஒரு பிரச்சினை தொடர்பாக தி.மு.க.வினர் எழுப்பிய கோரிக்கை ஏற்கப்படாததால் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.