ரயில்வே நிலைக்குழு தலைவர் பதவியில் நீடிப்பது ஏன்?: ஜெயலலிதாவுக்கு டி.ஆர்.பாலு பதிலடி
இதற்கு பதிலளித்து பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் பேசியபோது, இலங்கை பிரச்சனைக்காக ரயில்வே நிலைக்குழுவில் இருந்து டி.ஆர்.பாலு ராஜினாமா செய்யவில்லையே ஏன்? என்று பேசியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அதிமுக உறுப்பினர்கள் உள்பட ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு துறைக்கான நிலைக் குழுவிலும், மற்றொரு துறைக்கான கலந்தாய்வு குழுவிலும் இருப்பதற்கு சபை தலைவர் ஆணை பிறப்பித்து அந்த மரபுப்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
அந்த அடிப்படையில் நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழுவிலும், நிதித் துறையிலும் மற்றும் சில குழுக்களிலும் நான் பணியாற்றி வருகிறேன்.
நாடாளுமன்றத்தில் நீண்ட காலம் பணியாற்றி வரும் மூத்த உறுப்பினர்களில் ஒருவன் என்ற முறையில் ரயில்வே நிலைக்குழுவின் தலைவராகவும் பணியாற்ற சபாநாயகர் ஆணை பிறப்பித்து இருக்கிறார்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் எல்லா கட்சிகளின் உறுப்பினர்களும் இணைந்து அறிக்கைகளைத் தயாரித்து நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு வழங்கும் ஒரு ஏற்பாடாகத்தான் நிலைக் குழு செயல்படுகிறது. இதில் அமைச்சர்களின் குறுக்கீடும் கிடையாது. அரசியல் தலையீடுகளும் இருக்க முடியாது.
நிலைக் குழு மற்றும் இலாக்காக்கள் சம்மந்தப்பட்ட ஆலோசனை குழுக்களை நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர்கள் நியமிக்கிறார்கள். அதிமுக குழுவின் தலைவர் தம்பிதுரை கூட நாடாளுமன்றத்தில் அவை நடவடிக்கைகளை நடத்தும் மாற்று தலைவர் குழுவில் உறுப்பினராக இருக்கிறார். பல நேரங்களில அவை தலைவர் ஆசனத்தில் அமர்ந்து அவை நடவடிக்கைகளை நடத்துகிறார்.
இதைப் போலவே எங்கள் இயக்க உறுப்பினர் திருச்சி சிவா நாடாளுமன்ற மேலவையின் நடவடிக்கைகளை நடத்தும் பொறுப்பு வகிக்கிறார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகள், அதன் குழுக்களின் நடவடிக்கைகள் என்பவை சபாநாயகரின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை. முன்பு நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சி முடிவு செய்த போது 12 மணி நேரத்திற்குள் டெல்லிக்கு சென்று அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து அமைச்சர் பதவியை துறந்தவன்.
ஈழத் தமிழர் பிரச்சனையில், பல்வேறு கட்டங்களில் இழப்புக்கு ஆளானவர்கள் தான் திமுகவினர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் கூறியுள்ளார்.