மிரட்டிய முலாயம்! உ.பி. நிதி உதவிக்கு உறுதி கொடுத்த ப.சி.! தப்பிய மத்திய அரசு!!
இலங்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிக் கொண்டது. இதனால் வெளியில் இருந்து ஆதரவு தரக்கூடிய சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளையே மத்திய அரசு நம்பியிருக்கிறது. இந்நிலையில் முலாயம்சிங் யாதவை மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா மிகக் கடுமையாக விமர்சித்தார். முலாயம்சிங் யாதவுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பிருக்கிறது என்றும் பேனி பிரசாத் வர்மா கூறினார். இதனால் பேனிபிரசாத் வர்மாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி வலியுறுத்தி வந்தது. மேலும் மத்திய அரசுக்கான ஆதரவு குறித்து முலாயம்சிங் யாதவ் இறுதி முடிவு எடுக்கவும் அதிகாரம் கொடுக்கப்பட்டது.
முலாயம்சிங்கும் அவரது மகன் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும் கடந்த சில நாட்களாக காங்கிரசை கடுமையாக விமர்சித்தும் பாஜகவை புகழ்ந்தும் 3-வது அணியின் அவசியம் குறித்தும் வலியுறுத்தி வந்தனர். இதனால் மத்திய அரசு கவிழ்ந்துவிடும் என்ற பரபரப்பு உருவானது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் 300 வங்கிக் கிளைகள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ப.சிதம்பரத்துடன் முதல்வர் அகிலேஷ் யாதவும் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய முலாயம்சிங், அகிலேஷ் யாதவின் அரசை புகழ்ந்து பேசினார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் நிதி தேவை குறித்தும் அதற்காக மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று வாக்குறுதி அளித்தார். இதற்காக டெல்லி வருமாறு அகிலேஷ் யாதவுக்கு அழைப்பும் விடுத்தார். சமாஜ்வாடி கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில் முலாயம்சிங்கைப் பற்றி குறிப்பிடுகையில் அவரது கட்சியினர் அழைப்பது போல் "நேதாஜி", முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது அமைச்சர்களுக்கு ஒன்றை உறுதி அளிக்கிறேன்.. மத்திய அரசு எப்போதும் உத்தரப்பிரதேச அரசுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.
ப.சிதம்பரத்தின் இந்த அறிவிப்பு வெளியான சிலமணி நேரங்களிலேயே முலாயம்சிங், மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளமாட்டோம் என்று லக்னோவில் செய்தியசளர்களிடம் தெரிவித்தார்.
ப.சிதம்பரத்தின் அறிவிப்புக்குப் பின்னர் முலாயம்சிங் யாதவ் அரசுக்கான ஆதரவு தொடரும் என்பதை "சின்ன குழந்தைகளுக்கு லாலிபாப் வாங்கிக் கொடுக்கும் கதையாக இருக்கிறது"என்று பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் விமர்சித்திருக்கிறார்.