சஞ்சய் தத்தை மன்னித்துவிடுங்கள்: ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கட்ஜூ கடிதம்
1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு உச்ச நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அவருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று பாலிவுட் நட்சத்திரங்களும் மற்றும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பிரஸ் கவுன்சில் தலைவரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜூ சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு அளிக்குமாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில் இதே வழக்கில் தண்டனை பெற்ற 71 வயது மூதாட்டி சைபுன்னிசா அன்வர் காசிக்கும் பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
சஞ்சய் 5 ஆண்டுகள் சிறையில் இல்லாவிட்டாலும் அவர் சிறையில் இருந்ததற்கு இணையான வேதனையை அனுபவித்துவிட்டார். சைபுன்னிஸாவால் நடக்கவோ, பேசவோ முடியவில்லை. இந்நிலையில் அவர் 5 ஆண்டுகள் சிறையில் இருப்பது சந்தேகமே என்று கட்ஜூ தெரிவித்துள்ளார்.