ஆவடியில் காவலாளியை கட்டிப்போட்டுவிட்டு ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: ரூ.20 லட்சம் தப்பியது
சென்னை: ஆவடியில் காவலாளியின் கை, கால்களை கட்டிப்போட்டு அவரது வாயில் துணியைத் திணித்துவிட்டு ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க 2 பேர் முயற்சி செய்துள்ளனர்.
சென்னை ஆவடி கேம்ப் ரோட்டில் உள்ள புனித பீட்டர்ஸ் பொறியியல் கல்லூரி எதிரில் ஹெச்.டி.எப்.சி. வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு அயப்பாக்கத்தைச் சேர்ந்த கோபால் என்பவர் காவலாளியாக உள்ளார். நேற்று இரவு அவர் ஏ.டி.எம். மையத்திற்குள் படுத்து தூங்கிவிட்டார். இரவு 2 மணிக்கு 2 பேர் ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுப்பது போன்று அங்கு வந்துள்ளனர்.
அவர்கள் இரும்புக் கம்பியால் ஏடிஎம் எந்திரத்தின் மேல் பகுதியை உடைத்தனர். இந்த சத்தம் கேட்டு கண் விழித்த கோபால் கூச்சலிட்டார். உடனே அதில் ஒருவர் கோபாலின் கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு அவரது வாயில் துணியைத் திணித்துவிட்டு எந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். எந்திரத்தின் மேல் பகுதியை உடைத்த அவர்களால் பணம் இருக்கும் லாக்கரை உடைக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பித்துவிட்டனர்.
அப்போது எந்திரத்தில் ரூ.20 லட்சம் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை 6 மணிக்கு மற்றொரு காவலாளியான சுப்பிரமணி பணிக்கு வந்தார். அப்போது அவர் கோபால் கை, கால்கள் கட்டப்பட்டு கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
கொள்ளையர்கள் வருவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு தான் எஸ்.ஐ. தேவராஜ் அந்த வழியாக ரோந்து வந்து ஏடிஎம் மையத்தில் உள்ள ரோந்து புத்தகத்தில் கையெழுத்து போட்டுவிட்டு சென்றுள்ளார். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் தேவராஜ் கையெழுத்து போடுவது வரை தான் பதிவாகியுள்ளது. அதன் பிறகு கொள்ளையர்கள் வந்தது அதில் பதிவாகவில்லை. ஒரு வேளை கொள்ளையர்கள் கேமராவில் துணியைப் போட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.