எஸ்.பி. மீது பத்திரிக்கையாளர்கள் புகார்: நெல்லை சரக டிஐஜி சமாதானம்
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடும் போராட்டத்தின் போது, செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி கடுமையாக நடந்து கொண்டது தொடர்பாக புகார் அளித்தவர்களிடம் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி., சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து விஷவாயு வெளியானதை அடுத்து வைகோ உள்ளிட்ட பல அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நேற்று செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களிடம், மாவட்ட எஸ்.பி. ராஜேந்திரன் கடுமையாக நடந்து கொண்டார். நேரடி ஒளிபரப்பு செய்யவும் தடை விதித்தார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.பிக்கு எதிராக புகார் அளித்தனர்.
இந்த நிலையில் நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித் சரண், செய்தியாளர்களை அழைத்துப் பேசினார். நடைபெற்ற சம்பவத்திற்காக எஸ்.பி. ராஜேந்திரன் வருத்தம் தெரிவித்ததாகவும், வரும் காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பத்திரிகையாளர்களும், காவல்துறையினரும் ஒருங்கிணைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் டி.ஐ.ஜி. வேண்டுகோள் விடுத்தார்.