இவருதாங்க ருமேனியாவின் 'திகில் பாண்டி' காலின்... 5 விநாடிகளில் 15 செல்போன் சுட்டவர்!
புகாரெஸ்ட்: திருடன்னா இவன்தான்யா திருடன் என்று வாய் விட்டுப் பாராட்டும் அளவுக்கு செம திரில்லிங்கான, திறமையான ஒரு திருட்டை அரங்கேற்றியுள்ளான் 27 வயதேயான ருமேனிய திருடன் ஒருவன்.
அதாவது 5 விநாடிகளில் அவன் 15 செல்போன்களைத் திருடியுள்ளான். இதுதான் ருமேனியாவின் ஹாட் டாக்காம் இப்போது.
திருடன் பேரு என்னன்னா..!
இந்த நூதனத் திருடனின் பெயர் காலின் லோனல் ரோஸ்டாஸ். 27 வயதாகிறது இவனுக்கு.
எங்கு போய் திருடுவான் தெரியுமா...?
இவனது திருட்டு டார்கெட்டே காபி ஷாப்கள்தான். அங்கு மட்டுமே இவன் குறி வைத்து பறப்பான் - கூடவே கை நிறைய பேப்பருடன்.
செல்போன் மட்டும்
காலின் ஒரு காபி ஷாப்புக்குள் நுழைந்ததும் யாராவது டேபிளில் செல்போன் வைத்துள்ளனரா என்பதைப் பார்ப்பான். அதிக அளவிலான செல்போன்கள இருக்கும் இடத்தை நோட்டமிடுவான்.
அது எதுக்கு பேப்பர்...?
பின்னர் அந்த டேபிள் மீது நைசாக தான் கொண்டு வந்த பேப்பரை அப்படியே செல்போன் மீது போர்வையைப் போடுவது போல போடுவான். சிறிது நேரம் அந்த இடத்தில் இருப்பவர்களுடன் பேசிக் கொண்டிருப்பான். பின்னர் அப்படியே பேப்பரை எடுப்பது போல செல்போன்களையும் சேர்த்து எடுத்துக் கொண்டு கம்பி நீட்டி விடுவான்.
5 விநாடிகளில் 15 செல்லை அடித்து சிக்கினான்
இப்படித்தான் சமீபத்தில் ஒரு காபி ஷாப்புக்குப் போன காலின், அங்கு 15 செல்போன்களை சுட்டு விட்டான். விசேஷம் என்னவென்றால் இதற்காக அவன் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 5 விநாடிகள்தானாம்.
கேமராவில் சிக்கி ஜெயில் வாசம்
ஆனால் அவன் திருடியது சிசிடிவி கேமராவில் பதிவாகி விட்டது. இதனால் அவன் போலீஸாரிடம் சிக்கி்க் கொண்டான். விசாரித்தபோதுதான் அவனது திரில் திருட்டுக்கள் குறித்த முழு விவரமும் கிடைத்து போலீஸார் அதிர்ச்சியாகி விட்டனர்.
இப்போது 25 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறான் காலின்.