ஐஐடி-களில் 43% பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை!
லோக்சபாவில் கடந்த 13-ந் தேதி ஐஐடி காலி பணியிடங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட பதில் அத்ரிச்சிக்குரியதாக இருந்தன. 50%அளவுக்கு காலி பணியிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பொறியியல் படிப்பில் பி.ஹெச்.டி படிப்போர் எண்ணிக்கை குறைந்து போய் இருப்பதும் பெரும்பான்மையான பொறியியல் மாணவர்கள் கார்ப்பரேட் நிறுவனப் பணிகளையே அதிகம் விரும்பிச் செல்வதாலும் இந்த நிலைமை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதில் தெரிவிக்கப்பட்டிருந்த சில புள்ளி விவரங்கள்:
ஐஐடி வாரணசாமி, ரூர்கி உள்ளிட்ட 8 பழைய ஐஐடிகளில் 5,356 பேராசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவற்றில் 3,158 பேராசிரியர்களே பணியாற்றுகின்றனர். எஞ்சிய 41% காலியிடமாகவே இருக்கிறது. இதில் ஐஐடி வாரணாசியில் மட்டும் 57% பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
ஐஐடி டெல்லியில் 50%, ஐஐடி கராக்பூரில் 48%, ஐஐடி குவகாத்தியில் 42% பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. ஐஐடி கான்பூரில் 19%, ஐஐடி ரூர்கியில் 38% பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
புதிய ஐஐடிகளில் 410 பேராசிரியர் பணியிடங்கள் அதாவது 57% இடங்கள் காலியாக இருக்கின்றன. மொத்தமாக அனைத்து ஐஐடிகளிலும் 2,608 பேராசிரியர் பணியிடங்கள் அதாவது 43% பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
மேலும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (NIT) நிலைமையோ மிக மோசமாக இருக்கிறது. நாட்டின் 20 பழமையான தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களில்5,891 பேராசிரியர் பணியிடங்களுக்குஅனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால்3,083 பேர்தான் நியமிக்கப்பட்டிருக்கிறது. 48% பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. வாரங்கல், பாட்னா, ஸ்ரீநகர், ஜாம்ஷெட்பூர், குருஷேத்ரா,அகர்தலா, ராய்ப்பூர் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களில் 50%க்கும் அதிகமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதேபோல அனைத்து தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களிலும் 3,034 பேராசிரியர் பணியிடங்கள் அதாவது 50% பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
நடப்பு நிதி ஆண்டில் ஐஐடிகளுக்கு ரூ3,670 கோடியும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ரூ1,719 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.