எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள்கள் சேதம் முதல்தாள் அடிப்படையில் திருத்த முடிவு
சென்னை: 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம்தாள் கிழிந்து போன மாணவர்களுக்கு அவர்களின் முதல்தாள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரதேவி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பி.முட்லூரில் அரசு பள்ளி மையத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் எழுதிய தமிழ் இரண்டாம்தாள் விடைத்தாள்கள்
விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருச்சியில் அந்த பண்டலை இறக்கியபோது அதில் ஒரு கட்டு குறைந்திருந்தது. ஒரு விடைத்தாள் பண்டல் காணாமல் போனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி விருத்தாசலம் ரெயில்வே நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காணாமல் போன பண்டலை தண்டவாளத்தில் தேடினார்கள்.
ரெயில் நிலையம் அருகில் விடைத்தாள்கள் சிறுசிறு துண்டுகளாக சேதமடைந்து சிதறி கிடந்தன. சில தாள்கள் முழுமையாக இருந்தன. அவற்றை ஊழியர்கள் கைப்பற்றினார்கள். சரியாக கதவு மூடாததால் விடைத்தாள் பண்டல் கீழே விழுந்துள்ளது. அதில் அந்த வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஏறிச் சென்றதால் கிழிந்து நாசமாகிவிட்டது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும் விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைப்பற்றின மீதமுள்ள விடைத்தாள்களை ஆர்.எம்.எஸ். ஊழியர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.
சேதம் அடைந்த விடைத்தாள்கள் இன்று சென்னை கொண்டு வரப்பட்டன. கடலூர் மாவட்ட கல்வி அதிகாரி சுப்பிரமணியம் அரசு தேர்வு துறை இயக்குனர் அலுவலகத்திற்கு மதியம் கொண்டு வந்து ஒப்படைத்தார். அதை இயக்குனர் வசுந்தரா தேவி மற்றும் கல்வி அதிகாரிகள் பார்வையிட்டனர்.
எத்தனை விடைத்தாள்கள் முழுமையாக சேதம் அடைந்தன. பகுதியாக சேதம் அடைந்தது எத்தனை, சேதம் அடையாமல் தப்பியது எத்தனை விடைத்தாள் என்பதை தேர்வுத்துறை அதிகாரிகள் கணக்கிட்டு ஆய்வு செய்தனர்.
இதில் 160 விடைத்தாள்கள் முழுமையாக சேதம் அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மற்ற விடைத்தாள்கள் அதிர்ஷ்டவசமாக தப்பின.
மறுதேர்வு நடத்தப்படுமா? அல்லது தேர்வு நடத்தாமல் சலுகை மதிப்பெண் கொடுக்கப்படுமா என்று தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர்,
கடலூர் மாவட்டம் பி.முட்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தின் விடைத்தாளும், வெளங்கிபட்டு, கொத்தட்டை, அக்ஷயா மந்தீர், அன்னை சத்யா உயர் நிலைப் பள்ளி ஆகிய 4 பள்ளிகளின் விடைத்தாள்களும் 3 பண்டல்களாக கட்டப்பட்டு தபால் அலுவலகம் மூலம் விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு அனுப்பப்பட்டது.
அதில் ஒரு கட்டுதான் கீழே விழுந்து சேதம் அடைந்துள்ளது. எந்த பள்ளி மாணவர்களின் விடைத்தாள்கள், எத்தனை மாணவர்களின் விடைத் தாள்கள் சேதம் அடைந்து உள்ளன என்பது பற்றி அரசு தேர்வுத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
ஆனாலும் பாதிக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு மறு தேர்வு கிடையாது. அவர்கள் தமிழ் இரண்டாம்தாள் தேர்வை மீண்டும் எழுத வேண்டிய அவசியம் இல்லை. ஹ
தமிழ் முதல் தாள் விடைத்தாளை அடிப்படையாக கொண்டு அந்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.உதாராணமாக தமிழ் முதல் தாளில் 100-க்கு 90 மதிப்பெண் பெற்றால் இரண்டாம் தாளிலும் அதே அளவில் மதிப்பெண் வழங்கப்படும்.
ஒரு வேளை தமிழ் முதல்தாளில் அந்த மாணவர் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்திருந்தால், இரண்டாம் தாளில் தேர்ச்சி செய்து மார்க் கொடுக்கப்படும்.
மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் அச்சப்பட தேவையில்லை. கலக்கமடைய வேண்டாம் என்று கூறினார்.
மேலும் தபால்துறை ஊழியர்களின் அலட்சியத்தால் மாணவர்களின் விடைத்தாள் சேதம் அடைந்தது குறித்து கடலூர் மாவட்ட கலெக்டருக்கு புகார் கொடுக்கப்படுகிறது. விடைத்தாள் பண்டல்களை அனுப்பிய ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் யார் தவறு செய்து இருக்கிறார்கள் என்பதை விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை அதில் கூறியுள்ளது.
இந்த நிலையில் சேதம் அடைந்த விடைத்தாள்களை எரித்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாங்கள் செய்த தவறை மூடி மறைக்க விடைத்தாள்களை எரித்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.