திபெத் தங்க சுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு- 83 பேர் மண்ணோடு புதைந்து பலி!!
லாசா: சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் லாசா பகுதியில் தங்க சுரங்கம் ஒன்றில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதில் 83 பேர் மண்ணோடு புதைந்து போய் பலியாகினர்.
திபெத்தின் நிர்வாக நகரமான லாசாவில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள மலைப்பகுதியில் தங்கச் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கம் அமைந்துள்ள பகுதியில் நேற்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. சேறு சகதியுடன், பாறைகளும், குப்பைகளும் ஒட்டுமொத்தமாக சரிந்தன. அப்போது அந்த பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த 83 தொழிலாளர்கள் உயிரோடு புதைந்தனர்.
இவர்கள் சீனாவின் மிகப்பெரிய தங்க உற்பத்தி நிறுவனமான நேஷனல் கோல்டு குரூப் கார்ப்பரேசனில் பணியாற்றியவர்கள் ஆவர். 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், தீயணைப்பு வீரர்கள், படை வீரர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்டதற்கான காரணங்களை கண்டறியுமாறு அதிகாரிகளுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.