வறுமையால் வேதனை... ஒரே குடும்பத்தில் நான்கு பேர் விஷம் குடித்தனர்!
சென்னை: வறுமை, மகள்களைப் படிக்க வைக்க முடியாதது உள்ளிட்ட வேதனையால் மனம் உடைந்த பிட்டர் ஒருவர் தனது குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றார். இதில் ஒரு சிறுமி உயிரிழந்தாள்.
சென்னை மாதவரத்தை அடுத்த பொன்னியம்மன் மேடு கற்பகம் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (37). சென்னையில் உள்ள தனியார் ஸ்டீல் நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி வனிதா (30). இவர்களது மகன் அரி. மகள்கள் இரட்டையர்கள் மோகனபிரியா, மோனிகா (7). இருவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படிப்பு வந்தனர்.
சக்திவேலுக்கு குறைந்த வருமானம் வந்ததால் குடும்பத்தை நடத்த மிகவும் கஷ்டப்பட்டார். மகன், மகள்களின் படிப்பிற்கு பணம் கட்ட முடியாமல் பலரிடம் கடன் வாங்கி இருந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததால் மனவேதனையில் இருந்தார்.
நேற்று காலை சக்திவேல் அதே பகுதியில் வசித்து வரும் தாய் முனியம்மாளிடம் பணம் கடன் கேட்டார். ஆனால் அவர், ஏற்கனவே அதிகம் கொடுத்துவிட்டேன். இப்போது பணம் எதுவும் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.
இதில் மனம் உடைந்த சக்திவேல் இதுபற்றி மனைவி வனிதாவிடம் கூறி வருத்தப்பட்டார். பணம் இல்லாமல் வாழ்க்கையில் கஷ்டப்படுவதை விட குழந்தைகளுடன் தற்கொலை செய்வது மேல் என இருவரும் முடிவு செய்தனர்.
நேற்று இரவு அரி பாட்டி வீட்டிற்கு தூங்க சென்றுவிட்டான். மற்ற 4 பேரும் வீட்டில் இருந்தனர். நள்ளிரவில் சாப்பாட்டில் விஷத்தை கலந்து கணவன்- மனைவி இருவரும் தூங்கிக் கொண்டு இருந்த மகள்கள் மோகனபிரியா, மோனிகாவை எழுப்பி கொடுத்தனர். பின்னர் மீதி இருந்த சாப்பாடை சக்திவேலும், வனிதாவும் சாப்பிட்டனர்.
சிறிது நேரத்தில் வயிற்று வலியால் 4 பேரும் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கணவன்- மனைவி உள்பட 4 பேரும் விஷம் குடித்து உயிருக்கு போராடியபடி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவர்களை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகனபிரியா பரிதாபமாக இறந்தாள். மற்ற 3 பேரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரி பாட்டி வீட்டில் தூங்கியதால் தப்பினான்.