பாபர் மசூதி.. அத்வானிக்கு எதிராக ஏன் இன்னும் அப்பீல் செய்யவில்லை.. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சூடு
இதுதொடர்பாக உடனடியாக உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறும் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு மற்றும் சிபிஐயின் போக்கு குறித்து பெஞ்ச் அதிருப்தி தெரிவித்தது.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வதில் என்ன சிக்கல், ஏன் இத்தனை தாமதம் என்பதை விளக்குமாறு சிபிஐக்கும் உச்சநீதி்மன்றம் உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக அத்வானி உள்ளிட்டோர் தேசிய குற்றம் இழைத்து விட்டதாக சிபிஐ தனது அறிக்கையில் தெரிவித்ததற்கும் உச்சநீதி்மன்றம் கண்டனம் தெரிவித்தது. வழக்கு முடிந்து தீர்ப்பு வெளியாகும் வரை இதுபோன்ற வார்த்தைகளை சிபிஐ பயன்படுத்தக் கூடாது என்றும் கோர்ட் கண்டித்தது.
இதுகுறித்து நீதிபதி எச்.எல்.தத்து கூறுகையில், நாங்கள் இந்த வழக்கில் முடிவுக்கு வரும் வரை தேசிய குற்றம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது போன்ற வார்த்தைகளை சிபிஐ பயன்படுத்தக் கூடாது. தீர்ப்பு வரும்வரை இப்படிப்பட்ட தீர்மானமான வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் என்றார்.
அத்வானி தவிர சதீஷ் பிரதான், அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், சிஆர்பன்சால், சாத்வி ரிதம்பரா, வி.எச்.டால்மியா, மஹந்த் அவத்யநாத், வேதாந்தி, பரம் ஹன்ஸ் ராம் சந்திர தாஸ், ஜெகதீஷ் முனி மஹராஜ், நிருத்ய கோபால் தாஸ், தரம் தாஸ், சதீஷ் நகர் உள்ளிட்டோரும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.