ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்மனை எதிர்த்து 'ஏர்டெல்' சுனில் மிட்டல் மனு- 8-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு வழக்கில் ஆஜராகக் கோரி நீதிமன்றம் அனுப்பிய சம்மனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் மிட்டல் தாக்கல் செய்த மனு மீது வரும் 8-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் பாரதி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல், எஸ்ஸார் நிறுவனத் தலைவர் ரவி ரூயியா, ஹட்ச் நிறுவன இயக்குனர் ஹசிம் கோஷ் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் வரும் 11-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் மிட்டல், நீதிமன்றத்தில் தாம் ஆஜராவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை அவசர வழக்காக இன்று விசாரிக்கவும் அவர் தரப்பில் ஆஜராகி இருந்த ஹரீஸ் ஷால்வே கோரியிருந்தார். ஆனால் இம்மனு மீது வரும் 8-ந் தேதி விசாரணை நடைபெறும் .என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.