மீண்டும் அரசியலுக்கு திரும்பிய கார்த்திக்... 12 தொகுதிகளில் தனியாக போட்டியிட முடிவு!!!
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவராக இருக்கிறார் கார்த்திக். அவர் கடந்த சட்டசபைத் தேர்தலுடன் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியே இருந்தார். தலைவரே கப்சிப்பாகி விட்டாரே என்று அவரது கட்சித் தொண்டர்களும் காணாமல் போய் விட்டனர். இதனால் கட்சி இருக்கிறதா, இல்லையா என்பதே தெரியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் மறுபடியும் கட்சியை தூசி தட்டி வெளியில் எடுத்துள்ளார் கார்த்திக். மதுரை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நாடாளுமன்ற தேர்தலில் நாடாளும் மக்கள் கட்சி, தேவர் இன மக்கள் பெரும்பாண்மை ஓட்டு வங்கி உள்ள 12 தொகுதிகளில் போட்டியிடும்.
கூடங்குளம் அணுஉலை போராட்டத்தில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் போராட்டத்தை அரசு கொச்சைப்படுத்தக் கூடாது. மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும்.
இந்தியாவின் வெளியுறவு கொள்கையால் ஈழத்தமிழர்களின் விஷயத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஈழத்தமிழர்கள் விஷயத்தில் தமிழக மக்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும்.
நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெறும் ஈழத்தமிழர்களுக்கான உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வேன் என்றார்.
எல்லாம் சரி கார்த்திக், நீங்க எந்தத்தொகுதியில் போட்டியிடப் போகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நோ நோ அது சஸ்பென்ஸ் என்றார் சிரித்தபடி. தேர்தல் நேரத்தில்தான் தொகுதி குறித்துக் கூறுவாராம்.
தேர்தல் முடிவதற்குள் சொன்னால் போதும், ஒன்னும் அவசரமில்லை.