இலங்கை மீது பொருளாதார தடை; ஜெ.வுக்கு நெஞ்சார்ந்த நன்றி- நடிகர்கள் உண்ணாவிரதத்தில் தீர்மானங்கள்!
சென்னை: இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்த நடிகர், நடிகைகள் மத்தியில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் 7 தீர்மானங்களை நிறைவேற்றினார்.இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் நடிகர், நடிகைகள் சென்னையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இன்று உண்ணாவிரதம் இருந்தனர். இதில் ரஜினிகாந்த், கமல், சரத் குமார், அஜீத், தனுஷ், சூர்யா, கார்த்தி, சிவகுமார், சந்திரசேகர், ரமேஷ் கன்னா உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் கலந்து கொண்டனர். மேலும் தேவயாணி, தன்ஷிகா, மோனிகா, நளினி, ஊர்வசி உள்ளிட்ட பல நடிககைளும் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதப் பந்தலில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் 7 தீர்மானங்களை நிறைவேற்றினார். அவர் ஈழத் தமிழர்களுக்காக உயிர் நீத்த திலீபன் நினைவைப் போற்றி தீர்மானங்களை நிறைவேற்றினார்.
தீர்மானங்கள் வருமாறு,
1, இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு மறுவாழ்வு அமைத்து தர இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்
2. இலங்கையில் நடந்த இனப் படுகொலையில் பங்குள்ள போர்க் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
3. மேற்கூறிய இரண்டும் நடக்கும் வரையில் இந்திய அரசு இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.
4. இலங்கை கடற்படையால் இதுவரை 578 தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
5. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக சட்டசபையில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
6. இலங்கை பிரச்சனை தொடர்பாக போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள், அரசியல் கட்சியினர், தமிழக மக்கள், உலக தமிழர்கள் ஆகியோரின் உணர்வுகளை மதித்து இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7. போனால் திரும்ப வராதது உயிர். போராட உயிர் தேவை. அதனால் மாணவர்களும், இளைஞர்களும் இனி உயிர் தியாகம் செய்யாமல் அறவழியில் போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
ஈழம் பிறக்கட்டும், ஈழம் பிறக்கட்டும் என்று முழங்கி தனது உரையை முடித்துக் கொண்டார்.