உடம்பில் சத்து ஏற வேண்டும், பால் பழம் தாங்க... கற்பழிப்பு குற்றவாளி கேட்கிறான்!
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் பிசியோதெரப்பி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி திஹார் சிறையில்அடைக்கப்பட்டுள்ள வினய் சர்மா என்ற குற்றவாளி உடம்பில் சத்து பிடிப்பதற்காக தனக்கு பாலும், பழமும் தர உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில மனு செய்துள்ளான்.
டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் முகேஷ், வினய் சர்மா, அக்ஷய் மற்றும் பவன் ஆகியோர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே சிறையில்அடைக்கப்பட்டிருந்த ராம்சிங்தான் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டான்.
இந்த நிலையில், வினய் சர்மா விமானப்படை கிளர்க் தேர்வுக்கு தயாராகி வருகிறான். இவனுக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் பயிற்சியாளரை வழங்க வேண்டும் என டெல்லி கோர்ட்டில் வினய் சர்மா ஏற்கனவே மனு செய்திருந்தான். அதன்படி போட்டித் தேர்வு புத்தகங்கள் சிறை நிர்வாகம் வினய் சர்மாவுக்கு வழங்கி பயிற்சியாளருக்கும் ஏற்பாடு செய்தது.
இந்த நிலையில் கோர்ட்டில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வினய் சர்மா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விமானப்படை கிளர்க் தேர்வுக்கு தயாராவதால் தனக்கு பால், பழம் போன்ற சத்தான உணவுகளை வழங்க திகார் சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என வினய் சர்மா வேண்டுகோள் விடுத்திருந்தான்.
இது குறித்து கருத்து தெரிவிக்குமாறு திஹார் சிறை அதிகாரிகளுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.