செங்கல்பட்டில் ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி
சென்னை: செங்கல்பட்டில் மகள் மற்றும் பேத்தியுடன் வாக்கிங் போன திருப்பதி கோவில் பூசாரி 5 ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்க நடந்த போராட்டத்தில் படுகாயமடைந்து பலியானார்.
திருப்பதி கோவிலில் பூசாரியாக இருந்தவர் ராமன்(63). அவரது மகள்கள் ஜெயஸ்ரீ(30), பத்மஸ்ரீ(24). இதில் ஜெயஸ்ரீ திருமணமாகி கணவர் ரங்கநாதன் மற்றும் மகள் அக்ஷயஸ்ரீ(5) ஆகியோருடன் செங்கல்பட்டில் உள்ள வெங்கடாபுரத்தில் வசித்து வருகிறார். ராமன் தனது மனைவி அமிர்தவள்ளியின் முதலாமாண்டு நினைவு தினத்தன்று சடங்குகள் செய்ய ஜெயஸ்ரீ வீட்டுக்கு இளைய மகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை அமிர்தவள்ளிக்கு செய்ய வேண்டிய சடங்குகள் செய்யப்பட்டது. அன்று மாலை ராமன், இளைய மகள் பத்மஸ்ரீ மற்றும் பேத்தியுடன் வாக்கிங் சென்றார். அப்போது வழியில் வந்த 5 ரவுடிகள் பத்மஸ்ரீயை கிண்டலடித்துள்ளனர், அசிங்கமாகவும் பேசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராமன் தனது மகளை விட்டுவிடும்படி அவர்களிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள் செங்கல்பட்டுக்கு வந்து செல்ல வேண்டும் என்றால் தாங்கள் செய்வதை எல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
அப்போது ஒருவர் ஸ்டீல் பைப்பால் ராமனின் தலையில் அடித்தார். இதை தடுக்க வந்த பத்மஸ்ரீயையும் அந்த நபர் அடித்தார். மேலும் மற்றவர்களும் சேர்ந்து கொண்டு ராமன் சுயநினைவை இழக்கும் வரை தாக்கினர். அதற்குள் சிறுமி உதவி கேட்டு கூச்சலிடவே அந்த வழியாக வந்தவர்கள் உதவிக்கு வந்தனர்.
அவர்கள் ராமன் மற்றும் பத்மஸ்ரீயை சென்னையில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ள காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். தலையில் பலமாக அடிபட்டிருந்த ராமன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். பத்மஸ்ரீயின் தலையில் 16 தையல் போடப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.