மின் உற்பத்தி 10,000 மெகா வாட் ஆயிருச்சாமே.. மின் வெட்டும் குறைஞ்சிருச்சாமே!
அவர்கள் கூறுகையில், தேவைக்கு ஏற்ப முழுமையாக மின்சாரம் சப்ளை செய்ய, தமிழக மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இருந்தாலும் மின்சார உற்பத்தியில் ஏற்ற இறக்கமே காணப்படுகிறது. குறிப்பாக காற்று வீசாததால் காற்றாலைகள் மூலம் குறைவான மின்சாரமே உற்பத்தி செய்யப்படுகிறது.
இதனால் காற்றாலைகளை நம்பி மின்சார உற்பத்தியை நிர்ணயிக்க முடியவில்லை. கடந்த ஒரு மாதமாகவே காற்றாலைகள் மூலம் மிக மிகக் குறைவான மின்சாரமே உற்பத்தியாகிறது.
ஆனாலும் நேற்று முன்தினம் இரவு 7.20 மணி நிலவரப்படி 979 மெகாவாட்டும், நேற்று அதிகாலை 839 மெகாவாட்டும், நேற்று காலை 7.50 மணி நிலவரப்படி 166 மெகாவாட்டும் காற்றாலைகள் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளன.
அதே போல தெர்மல் மின்சார உற்பத்தி நிலையங்களின் தயாரிப்புப் திறனான 2,970 மெகாவாட்டை விட நேற்று முன்தினம் இரவு 7.20 மணிக்கு கூடுதலாக 3,135 மெகாவாட்டும், நேற்று அதிகாலை 1.50 மணிக்கு 3,060 மெகாவாட்டும், நேற்று காலை 7.50 மணிக்கு 3,065 மெகாவாட்டும் உற்பத்தி செய்யப்பட்டது.
இதனால் மொத்த மின்சார உற்பத்தியும் நேற்று முன்தினம் இரவு 10,496 மெகாவாட்டும், நேற்று அதிகாலை 1.50 மணிக்கு 10,381 மெகாவாட்டும், தொடர்ந்து நேற்று காலை 7.50 மணிக்கு 9,496 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது.
இதனால் கடந்த 2 நாட்களாக மின்சார உற்பத்தி நன்றாக உள்ளது. இதனால் மின்தடை நேரமும் குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் 3வது யூனிட் சோதனை ஓட்டமும், வல்லூர் 2வது யூனிட் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து வருகிறது. வல்லூரில் 3வது யூனிட்டும் விரைவில் சோதனை ஓட்டத்திற்கு வர உள்ளது.
இதுதவிர பல்வேறு புதிய திட்டங்களும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் நிலவி வரும் மின்சார பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துவிட்டதால், மின் தேவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மின் வெட்டு நேரத்தை வெகுவாகக் குறைக்க இயலவில்லை என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தேர்வு நேரத்தில் மின் வெட்டால் கடும் பிரச்சனையை மாணவ, மாணவிகள் சந்தித்துக் கொண்டுள்ள நிலையில், மின்வாரிய அதிகாரிகள் இவ்வாறு 2 நாள் கூடுதல் மின்சாரம் பற்றி சந்தோஷப்பட்டு வருகின்றனர். தினமும் இதே மாதிரி மின்சாரம் இருந்தால் தான் படிக்க வசதியாய் இருக்கும்...