ஆப்கன் போரில் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு கல்வி: பள்ளி தொடங்கினார் ஏஞ்சலினா ஜோலி
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆப்கானிஸ்தானில் போரினால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை தொடங்கியுள்ளார் நடிகை ஏஞ்சலினா ஜோலி.
ஹாலிவுட்டின் 'கனவுக் கன்னி'யான நடிகை ஏஞ்சலினா ஜோலி(37), நடிப்பு தவிர, ஆடை மற்றும் நகைகள் வடிவமைப்பதையும் இவர் தொழிலாக செய்து வருகிறார். 'ஸ்டைல் ஆஃப் ஜோலி' என்ற பெயரில் உலகின் பிரபல கடைகளில் இவரது தயாரிப்புகள் பெரிய அளவில் விற்பனையாகின்றன.
இந்த விற்பனையின் மூலம் கிடைக்கும் லாபத்தை வைத்து, 'பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி அறக்கட்டளை' என்ற அமைப்பை ஏஞ்சலினா ஜோலி உருவாக்கியுள்ளார்.
நல்லெண்ணத்தூதர்:
ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ண தூதராகவும் உள்ள இவர், கடந்த ஆண்டு போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவிற்கு சென்றார். அங்கு உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த பெண்களிடையே கண்ணீர் மல்க அவர் ஆற்றிய உரை அனைவரின் மனதையும் கவர்ந்தது.
பெண்கல்விக்காக:
போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்விக்காக பள்ளிக்கூடங்களை தொடங்க ஏஞ்சலினா ஜோலி முடிவெடுத்தார்.
பள்ளி திறப்பு:
முதல்கட்டமாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு அருகே பெண்கள் பள்ளி ஒன்றை அவர் திறந்துள்ளார். இந்த பள்ளியில் சுமார் 200 முதல் 300 பிள்ளைகள் படிக்க முடியும்.
விரைவில் கிளைகள்:
உலகின் பிற நாடுகளிலும் இதுபோன்ற பள்ளிகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளில் தற்போது ஏஞ்சலினா ஜோலி மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.