சிங்கப்பூரில் இருந்து வந்த சவப்பெட்டியில் உடலே இல்லை: டெல்லி கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகள் வாதம்
டெல்லி: சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் வந்த சவப்பெட்டியில் டெல்லியில் கற்பழிக்கப்பட்டு தாக்கப்பட்டதில் இறந்த மாணவியின் உடல் இல்லை என்று குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி கற்பழிக்கப்பட்டு தாக்கப்பட்டார். அவர் முதலில் டெல்லியில் உள்ள சப்தர் ஜங் மருத்துவமனையிலும், பின்னர் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஒரு மைனர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பேருந்து ஓட்டுநரான ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். டெல்லி விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின்போது ஏர் இந்தியா அதிகாரி ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது குற்றவாளிகளான முகேஷ், அக்ஷய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏர் இந்தியா அதிகாரியை குறுக்கு விசாரணை செய்தார். அப்போது வழக்கறிஞர், சிங்கப்பூரில் இருந்து வந்த சவப்பெட்டியில் மாணவியின் உடல் இல்லை, ஏதோ பொருட்கள் இருந்தன என்றார். இதை அதிகாரி மறுத்தார். அவர் கூறுகையில், ஆவணங்களின்படி சவப்பெட்டியில் மாணவியின் உடல் தான் இருந்தது. சவப்பெட்டியின் மொத்த எடை 140 கிலோ ஆகும் என்றார்.
அதற்கு வழக்கறிஞர், சவப் பெட்டியில் உடல் தான் இருந்தது என்பது ஸ்கேன் செய்யப்பட்டதா என்று கேட்டதற்கு அந்த அதிகாரி அத்தகைய ஸ்கேன் கருவி அங்கு இல்லை என்றார்.