ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: மாஜி தளபதி தியாகி, உறவினர்கள் தேடப்படும் குற்றவாளிகள்- சிபிஐ
இந்திய விவிஐபிக்கள் பயணம் செய்ய இத்தாலி நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ரூ. Rs 3,600 கோடி ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இத்தாலியில் பின் மெக்கானிக்கா நிறுவனத்தின் தலைவரும், அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தின் தலைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ரூ. 3600 கோடி ஹெலிகாப்டர் பேரத்தில் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ. 360 கோடி லஞ்சம் கொடுத்ததாக அசிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டனர்.
இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. விசாரணையில் இந்திய விமானப் படையின் முன்னாள் தளபதி தியாகி லஞ்சம் வாங்கியது உறுதியானது. ஆனால் அவர் எவ்வளவு லஞ்சம் வாங்கினார், எப்படி வாங்கினார் என்பது இன்னும் தெரியவில்லை. இந்நிலையில் கடந்த 13ம் தேதி தியாகி அவரது உறவினர்கள் சஞ்சீவ் தியாகி என்ற ஜூலி தியாகி, ராஜீவ் தியாகி மற்றும் சந்தீப் தியாகி உள்பட 8 இந்தியர்கள் மற்றும் 5 வெளிநாட்டவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தியாகி, அவரது உறவினர்கள் 3 பேர் மற்றும் 4 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதை தடுக்க எல்லையில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளுக்கும் தேடப்படும் குற்றவாளிகள் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கிடோ ரால்ப், கார்லோ வாலன்டினோ பெர்டினான்டோ கெரோசா மற்றும் கிறிஸ்டியன் மிஷல் ஆகிய 3 பேரை பிடிக்க இன்டர்போலின் உதவியை நாடவிருக்கிறது சிபிஐ.