தண்ணீர் லாரி ஹார்ன் சத்ததால் நிலைகுலைந்த தாய்: விபத்தில் கல்லூரி மாணவி பலி
சென்னை: தண்ணீர் லாரி மோதியதில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தாய் கண் எதிரே உடல் நசுங்கி பலியானார். இதை கண்டித்து கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தற்செயலாக அந்த வழியாக சென்ற மற்றொரு லாரி டிரைவரும் விபத்து ஏற்படுத்தியதால், மாணவர்கள் அவரை பிடித்து அடித்தனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையை அடுத்த மடிப்பாக்கம், கார்த்திகேயபுரம் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் செந்தில் ரவி. அவருடைய மனைவி லட்சுமி. இவர்களது மகள் சுகன்யா (வயது 19). இவர், பொன்மாரில் உள்ள ஒரு முதலாம் ஆண்டு எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் படித்து வந்தார். இலங்கை பிரச்சினை தொடர்பாக மாணவர்களின் போராட்டத்தால் மூடப்பட்டிருந்த கல்லூரிகள், கடந்த 15 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது.
தினமும் கல்லூரி பஸ்சில் செல்லும் சுகன்யா, நேற்று காலை கல்லூரி பஸ்சை தவற விட்டதனால், தனது தாய் லட்சுமியுடன் மொபட்டில் கல்லூரிக்கு சென்றார். சித்தாலபாக்கம்-மாம்பாக்கம் சாலையின் நடுவே தடுப்பு சுவர் கட்டுமான பணி நடப்பதால் ஒரே பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இந்த சாலையில் லட்சுமி, தனது மகளுடன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே தண்ணீர் எடுத்துக்கொண்டு சென்னை நோக்கி வேகமாக வந்த ஒரு லாரியில் திடீரென டிரைவர், அதிக சத்தத்துடன் ஹாரனை அடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறிய லட்சுமி, சாலையின் ஓரமாக ஒதுங்க முயன்றார். ஆனால் வேகமாக வந்த லாரி, எதிர்பாராதவிதமாக தட்டியதால் மொபட் கீழே விழுந்தது. இதனால் சாலையின் ஓரமாக லட்சுமி விழுந்து விட்டார்.
ஆனால் மாணவி சுகன்யா, சாலையின் நடுவே விழுந்ததால் அவர் மீது தண்ணீர் லாரி ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கிய மாணவி சுகன்யா, தாய் கண் எதிரே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.இதை கண்டதும் லாரி டிரைவர், கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாணவி பலியாகி கிடப்பதை கண்டு ஆத்திரமடைந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், திடீரென சாலையை மறித்து . விபத்து ஏற்படுத்திய லாரியின் முன்பக்க கண்ணாடியையும் அடித்து உடைத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பள்ளிக்கரணை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் சமரசம் பேசினார்கள்.
அப்போது அந்த சாலையில் வந்த மற்றொரு தண்ணீர் லாரி, போலீஸ் வாகனத்தின் மீது மோதியது.இதை கண்டு மேலும் ஆத்திரமடைந்த மாணவர்கள், அந்த லாரியில் இருந்த டிரைவரை அடிக்க முயன்றனர். மாணவர்கள் பாய்ந்து வருவதை கண்டு பயந்து போன டிரைவர், லாரியில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடினார்.
ஆனால் மாணவர்கள் டிரைவரை விடாமல் விரட்டிச் சென்று துரத்தி துரத்தி சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார், மாணவர்களிடம் இருந்து டிரைவரை மீட்டனர்.
மாணவர்கள் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவர்களின் போராட்டம் பற்றி தகவல் அறிந்ததும் கல்லூரி தாளாளர் டாக்டர் வாசுதேவன் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் வந்து மாணவர்களிடம் சமரசம் பேசியதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் போக்குவரத்து சீரானது.இதையடுத்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் தினகரன் மற்றும் போலீசார் பலியான மாணவி சுகன்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
பலியான மாணவியின் உடலுக்கு சென்னை மாநகராட்சி 187-வது வட்ட கவுன்சிலர் உமா தியாகராஜன், நன்மங்கலம் ஊராட்சி மன்ற துணை தலைவர் லயன்கிரி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
இது பற்றி கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் கூறியதாவது, ‘சித்தாலபாக்கம், மேடவாக்கம் போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நிலத்தடி நீரை எடுத்து செல்கின்றனர். இதற்காக பயன்படுத்தப்படும் லாரிகளை அதன் டிரைவர்கள் கண்மூடித்தனமாக ஓட்டுகின்றனர். இவ்வாறு அதிவேகமாக லாரிகளை ஓட்டிச்செல்வதால் பொதுமக்கள் அச்சப்படவேண்டிய நிலை உள்ளது.
மேலும் லாரிகள் அதிக சத்தத்துடன் கூடிய ஹாரன்களை அடித்து செல்கின்றனர். இதை போக்குவரத்துத்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.