பொட்டு சுரேஷ் கொலை: காட்டுவாசி முருகன் சரணடைந்தும் அமைதி காக்கும் போலீஸ்…
மதுரை: பொட்டு சுரேஷ் கொலைவழக்கில் அட்டாக் பாண்டியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ‘காட்டுவாசி' முருகன் சரணடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்காமல் வழக்கை ஆறப்போட்டுள்ளனர் போலீசார்.
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த "பொட்டு" சுரேஷ் கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக "அட்டாக்" பாண்டி உள்பட பலரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் "அட்டாக்" பாண்டியின் கூட்டாளிகளான சந்தானம், கார்த்திக், விஜயபாண்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் சரண் அடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிலரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான அட்டாக் பாண்டியை இன்னும் கைது செய்ய முடியவில்லை. இந்த நிலையில் கீரைத்துறையை சேர்ந்த திருமுருகன் என்ற காட்டுவாசி முருகன் மதுரை 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் திங்கட்கிழமை சரண் அடைந்தார். அவரை காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு ராஜலிங்கம் உத்தரவிட்டார்.
10 பேர் சரண் 5 பேர் கைது
பொட்டு வழக்கில் ஐந்து பேர் கைதானார்கள். 10 பேர் சரணடைந்தனர். அட்டாக் பாண்டியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த காட்டுவாசி முருகன் தற்போது சரணடைந்துள்ள நிலையில் பிரவீன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். அவரையும் பிடித்து விட்டால் அட்டாக் பாண்டியை எளிதாக வளைத்து விடலாம் என்று போலீசார் நினைக்கின்றனர்.
ஏனெனில் மதுரையில் இருக்கும் ஸ்டாலின் ஆதரவு தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு நெருக்கமானவராக இருந்தவர் இந்தக் காட்டுவாசி. கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களில் முக்கியமானவர். தான் செல்லும் இடத்துக்கு எல்லாம் தன்னோடு பிரவீன், காட்டுவாசி முருகன் இருவரையும் அழைத்துச் சென்றுவிடுவார் அட்டாக். எனவேதான் காட்டுவாசி முருகனை வைத்து அட்டாக் பாண்டியை பிடித்துவிடலாம் என்று நினைக்கின்றனர்.
அமைதி காக்க முடிவு
ஆனால் பொட்டு கொலை வழக்கை சில மாதங்களுக்கு ஆறப்போட முடிவு செய்துள்ளனராம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த கொலைவழக்கில் பரபரப்பு காட்டலாம் என்றும் கூறப்படுகிறது.