தமிழகத்தில் நாளை நடக்கும் கூட்டுறவுச் சங்க தேர்தலுக்கு தடை இல்லை: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதேசமயம் கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 25 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி சென்னை தியாகராயர் நகர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எம்.ஆறுமுகம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனுவை தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து பரமசிவம் உள்பட 2 பேர் சார்பாக வக்கீல் சி.பிரகாசம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பாக சங்க உறுப்பினர்கள் சிலர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் சுரீந்தர் சிங் நிஜ்ஜார், பினாகி சந்திர கோஷ் அடங்கிய அமர்வு புதன்கிழமை பரிசீலித்தது.
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் அதிகாரம் சங்கத்தின் இயக்குநர்களுக்கு மட்டும் இருந்தது. அதை மாற்றி, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கு பொதுக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதாகும்.
"தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் செல்லும்' என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
கூட்டுறவுச் சங்கத் தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் வழக்கறிஞர் நந்தகுமார் கேட்டுக்கொண்டார்.
தமிழக அரசு சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் குருகிருஷ்ணகுமார் ஆஜராகி,கூட்டுறவு சங்க தேர்தல் கடந்த 11 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. இதனால் கூட்டுறவு சங்க பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சங்கங்கள் நலிவடைந்த நிலையில் உள்ளன. இவற்றுக்கு புத்துணர்ச்சி அளிக்க புதிய சட்ட திருத்தம் கொண்டுவந்து, அதன்படி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி தொடங்கி முடிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். தேர்தல் நடத்த அனுமதிக்க வேண்டும். தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தற்போது தடை விதிக்க கூடாது என்றார்.
அதைக் கேட்ட நீதிபதிகள், "தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. உங்கள் மனு தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்' என்றனர்.