சிறப்பு முகாம்களை மூடக்கோரி பூந்தமல்லியில் ஈழத் தமிழர் உண்ணாவிரதம்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறப்பு முகாம்களை மூட வலியுறுத்தி பூந்தமல்லி சிறப்பு முகாமில் ஈழத்தமிழர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். 8 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்துவதால் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாகியுள்ளது.
சிறப்பு முகாமில் வாடும் ஈழத் தமிழர்கள் அனைவரும் திறந்தவெளி முகாமிற்கு மாற்றப் படவேண்டும், அவர்கள் குடும்பத்துடன் இணைந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என்பது போராட்டம் நடத்தும் சாந்தகுமாரின் கோரிக்கையாகும்.
அகதிகளாக வந்த தங்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக கூறும் சாந்தகுமார், தன்னைப் போல ஆயிரக்கணக்கானவர்களை விடுவிக்க கோரி இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு சந்திர குமாரின் மனைவி மற்றும் அவரது இரு குழந்தைகள் இவரை பார்க்க முகாமிற்கு வந்தனர். ஆனால் போலீசார் அவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. உடனே சாந்தகுமாரின் மனைவி அதே இடத்தில் அமர்ந்து போராடினார். அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதை கேள்விப் பட்ட சந்திரகுமார் தூக்க மாத்திரைகள் நிறைய உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் . அவரை சக முகாம் வாசிகள் காப்பாற்றி போலீசில் ஒப்படைத்தனர். உடனே அவரை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றினர். மீண்டும் சிறப்பு முகாமில் கொண்டு வந்து அடைக்கப்பட்டார். இதனையடுத்து சாந்தகுமார் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். சந்திரகுமாரின் மனைவி குழந்தைகள் புழல் சிறையில் இருந்து விடுதலை அடைத்தாலும் சந்திர குமார் இன்னும் அவரது உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடவில்லை.
எட்டாவது நாள் ஆகியும் அரசு தரப்பில் இருந்து யாரும் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை . இவரது உண்ணா நிலையை முடித்து வைக்க ஒருவரும் முன்வரவில்லை. இந்நிலையில் இவரது உடல் நிலை மோசம் அடைந்துள்ளதால் சாந்தகுமாரின் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications