இலங்கை விமான அலுவலகத்துக்குள் புகுந்த மாணவர்கள் கைது… திருச்சியில் பரபரப்பு
திருச்சி: திருச்சியில் இலங்கை விமான முன்பதிவு அலுவலகத்துக்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைப் பிரச்சினையினால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து காலவரையின்றி மூடப்பட்ட கல்லூரிகள் நேற்றுதான் திறக்கப்பட்டன. சில கல்லூரிகளில் மாணவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து வகுப்புகளுக்கு சென்றனர்.
ஆனால் சேலம், திருச்சியில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் சத்தியகுமரன், வெட்டுபெருமாள் உள்ளிட்ட 11 மாணவர்கள் நேற்று காலை திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, ஐ.ஜி.அலுவலகம் எதிரே உள்ள தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கே அமைச்சர் சல்மான் குர்ஷித் உருவபொம்மையை எரித்தனர்.
இதனை தொடர்ந்து போராட்டம் நடத்திய மாணவர்கள் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள இலங்கை நாட்டுக்கு சொந்தமான மிகின்லங்கா விமான டிக்கெட் முன்பதிவு அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு இலங்கை அரசை கண்டித்து கோஷமிட்டபடி திடீரென்று அலுவலகத்துக்கு உள்ளே புகுந்து தரையில் அமர்ந்தனர். இந்த அலுவலகத்தை இழுத்து மூடும் வரை போராடுவோம் என்று முழக்கமிட்டனர்.
அப்போது அங்கு வந்த செசன்சு கோர்ட்டு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, அங்கு அமர்ந்து இருந்த மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீசார் வேனில் ஏற்றினார்கள். இதில் மொத்தம் 11 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.