தூத்துக்குடி: நாசரேத் திருமண்டல பிஷப் ஜெபசந்திரன் சஸ்பெண்ட்
தூத்துக்குடி: தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் ஜெபசந்திரனை சஸ்பெண்ட் செய்து சினாட் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி பிஷப் பொறுப்பை பிரதம பேராயர் தேவகடாச்சம் கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய திருச்சபையின் சிஎஸ்ஐ தலைமை அலுவலகமாக சினாட் சென்னையில் உள்ளது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, இலங்கை ஆகியவற்றிலுள்ள 22 திருமண்டலங்கள் (டயோசீஸ்) இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் கடந்த 5-2-2013 அன்று சினாட் செயற்குழு கூட்டம் சென்னையில் பிரதம பேராயார் தேவகடாச்சம் தலைமையில் நடந்தது.
அப்போது தென்னிந்திய திருச்சபையின் பொது செயலாளர் பிலிப் என்பவர் செயற்குழு கூட்டம் பற்றிய அறிக்கை படித்தார். அப்போது தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் ஜெபசந்திரன் மற்றும் சினாட் செயற்குழு உறுப்பினர் அமிர்தம் ஆகியோர் பொதுச் செயலாளர் அறிக்கையை படிக்க விடாமல் தடுத்து அவரை தரக்குறைவாக விமர்சித்து மைக்கை பிடுங்கி எறிந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தென்னிந்திய திருச்சபையின் வரலாற்றில் நடந்திராத சம்பவம் என்பதாலும், தூத்துக்குடி-நாசரேத் பேராயர் ஜெபசந்திரனை சஸபெண்ட் செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றும், இடையில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடைபிடிக்கப்பட்டதால் அதற்கான உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் சினாட் சிஎஸ்ஐ பொதுச் செயலாளர் பிலிப் ஜெபசந்திரனுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மேலும் அமிர்தம் அக்கூட்டத்திலேயே வருத்தம் தெரிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகத்தை பிரதம பேராயரும், குமரி திருமண்டல பேராயருமான தேவகடாச்சம் கவனிப்பார் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.