தேர்தல் சீட் கேட்டு பெங்களூர் காங். அலுவலகம் முற்றுகை: போலீஸ் தடியடியில் 'வாடகை' தொண்டர் பலி
பெங்களூர்: பெங்களூரில் வரும் கர்நாடகா சட்டசபை தேர்தலில் தங்கள் தலைவர்களுக்கு சீட் கேட்டு தொண்டர்கள் நேற்று 4வது நாளாக காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அங்கிருந்த பிரியாணி, 300 ரூபாய்க்காக கூட்டி வரப்பட்ட ஒருவர் திடீர் என்று மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.
மரணமடைந்தவர் திருப்பத்தூரைச் சேர்ந்த வேலு (48) ஆவார். பெங்களூரில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்த இவர், 300 ரூபாய், பிரியாணிக்கு ஆசைப்பட்டு காங்கிரஸ் தலைவர் ஒருவருக்காக கூட்டம் காட்ட வந்தவர் ஆவார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் நடக்கவிருக்கிறது. இகையடுத்து 224 தொகுதிகளுக்குமான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலுக்காக கட்சியினர் காத்துக் கொண்டிருக்கின்றனர். வேட்பாளர் பட்டியல் இன்று டெல்லியில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இந்த பட்டியலில் உள்ளவர்களின் பெயர்கள் கசிந்துள்ளது. பட்டியலில் இல்லாதவர்கள் தங்கள் ஆதரவாளர்களை அனுப்பியும், ஆதரவாளர்கள் இல்லாத டம்மி பீஸ் தலைவர்கள், பிரியாணி-காசு கொடுத்து ஆட்களை அனுப்பி, பெங்களூர் குயின்ஸ் ரோட்டில் இருக்கும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.
இதனால் அந்த அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று 4வது நாளாக தொண்டர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். மகாதேவபுரா பகுதியில் நாகேஸுக்கு சீட் கேட்டு அவரது தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் திடீர் என்று அலுவலகத்திற்குள் நுழைய முயற்சி செய்தனர். போலீசார் அவர்களை தடுக்க முயன்றும் கூட்டம் அதிகமாக இருந்ததால் முடியவில்லை. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது பின்னர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த வேலு ஒருவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில் அவர் பெயர் வேலு என்பது தெரிய வந்தது. அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வேலுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிவாஜி நகர் பவ்ரிங் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் அவர் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.