சென்னை பஸ்சில் கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதல்... பயணிகள் காயம்- அலறி ஓட்டம்
திருவேற்காட்டில் இருந்து பெரம்பூர் செல்லும் 29இ பேருந்து இன்று காலை பெரம்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் இருந்த மாணவர்களுக்குள் கோஷ்டி தகராறு ஏற்பட்டது.
அப்போது மாணவர்களில் ஒரு கோஷ்டியில் திடீரென பேருந்தில் இருந்து கீழே இறங்கி கற்களை வீசினர். திடீரென கற்களை வீசியதால் பேருந்தில் இருந்த பயணிகள் மீது கற்கள் விழுந்து காயம் ஏற்பட்டது. இதில் பயந்து போன பெண்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.
இருவேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்குள் ஏற்கனவே தகறாறு இருந்ததாகவும், இன்று பேருந்து படிக்கட்டில் நின்று தகரத்தை தட்டிக்கொண்டு பாட்டு பாடிவதில் தகராறு ஏற்பட்டது. பின்னர் அதுவே மோதலாக மாறியதாகவும் சம்பவ இடத்தில் இருந்த மாணவர்கள் தெரிவித்தனர்.
சென்னையில் அடிக்கடி கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்படுவது தொடர்கதையாகிவருகிறது. இதனை தடுக்க மாணவர்களுக்கு இடையை ஆலோசனை குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.