கொளுத்தும் வெயில்: தாமிரபரணி ஆற்றில் 'குடியேறிய' யானை… அலறி ஓடிய மக்கள்
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் வியர்வையில் நனைத்து வருகின்றனர். வெப்பத்தின் தாக்கம் தாங்கமுடியாமல் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் வாடி வருகின்றன.
இந்நிலையில் பொட்டல்புதூரை சேர்ந்த யானை ஜமீலா பொன்னக்குடியிலுள்ள ஒரு பள்ளிவாசலுக்கு அழைத்து வரப்பட்டது. பாகன் மாரி மீண்டும் யானை ஜமீலாவை பொட்டல்புதூருக்கு அழைத்து சென்றார். செல்லும் வழியில் தாமிரபரணி ஆற்றில் யானை குளிப்பாட்ட எண்ணிய அவர் வண்ணார்பேட்டை பேராச்சியம்மன் கோவில் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் யானையை குளிப்பாட்ட இறங்கினார். தண்ணீரை பார்த்ததும் குஷியான யானை ஆற்றின் உள்ளே இறங்கி ஆட்டம் போட்டது.
குளிர்ச்சியில் குஷியான யானை தண்ணீருக்குள் அங்கும் இங்கும் ஓடியதால் ஆற்று்க்குள் குளிக்க வந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். பாகன் அதை கரைக்கு கொண்டு வர எவ்வளவோ முயற்சி செய்தும் அதனை கொண்டு வர முடியவில்லை. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் வந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் பாகன் தென்னை ஓலை, உள்ளிட்ட பொருட்களை ஆற்றுக்குள் கொண்டு வந்து யானையை தாஜா செய்து கரைக்கு கொண்டு வந்தார். பின்னர் யானை பொட்டல்புதூருக்கு கொண்டு செல்லப்பட்டது.